இரட்டை குழந்தை விவகாரம்: விக்கி நயன்தாரா எஸ்கேப்… சிக்கிய மருத்துவமனை!

Published On:

| By christopher

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாடகைதாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதனையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் ஒரு மருத்துவர் உட்பட 3 பேர் கொண்ட குழு நயன்தாரா – விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், இரட்டை குழந்தைக்கு வாடகை தாயாக இருந்தது கேரளாவைச் சேர்ந்த நயன்தாராவின் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்தது. மேலும் சென்னையில் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையையும் அதிகாரிகள் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து தங்களது திருமணம் தொடர்பான சில முக்கியமான ஆவணங்களை நயன் விக்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான அறிக்கையினை இன்று (அக்டோபர் 26) வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், ”சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர்.

இச்செய்தியை தொடர்ந்து இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் 13.10.2022 உயர்மட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் அத்தம்பதியர் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிய வந்தது.

விதிகள் மீறப்படவில்லை!

அம்மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் வாடகைத்தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் நேரடி விசாரணை இக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அச்சிகிச்சை தொடர்பான விசாரணையில் கீழ்காணும் ஆய்வு குறிப்புகள் அறிவிக்கப்படுகிறது.

இவ்விசாரணையில் இத்தம்பதியர்கள் (Intending Couple) மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன (ICMR) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிய வந்தது.

ICMR வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.10.5-ன்படி வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

இத்தம்பதியருக்கு (Intending Couple) பதிவு திருமணம் 11.03.2016இல் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ICMR வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.16.2-ன்படி மேற்காணும் தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச்சான்று விசாரணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

nayanthara vignesh shivan did not break the rules

குடும்ப மருத்துவரிடம் விசாரணை இல்லை!

தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020-ல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார்.

அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்தபோது அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை. மேலும் விசாரணையில் அம்மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிய வருவதால் அக்குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை.

வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயம்!

சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 2020 மாதத்தில் சினைமுட்டை (Oocytes) மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் (Embroyo) உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு நவம்பர் 2021 மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது.

மார்ச் 2022-ல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கபட்டுள்ளதாக தெரிய வருகிறது. செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இச்சட்டத்திற்கு முந்தைய ICMR வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைதாயாக செயல்படவும், அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது.

விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் 09.10.2022 அன்று தம்பதியர்களிடம் (Intending Couple) வழங்கப்பட்டுள்ளது.

செயற்கை கருத்தரித்தல் மையத்தை மூட நோட்டீஸ்!

இந்த விசாரணையில் தனியார் மருத்துவமனையில் கீழ்கண்ட குறைபாடுகள் இக்குழுவால் கண்டறியப்பட்டது.

ICMR வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை.

எனவே, மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

காந்தாரா: ரஜினிகாந்தின் கருத்தும் ரிஷப் ஷெட்டியின் பதிலும்!

T20 WorldCup 2022: தொடரும் சோகம்… அயர்லாந்து அணியிடம் அடிபணிந்த இங்கிலாந்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share