விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. ஒரே சமயத்தில் விஜய் சேதுபதிக்கு நயன்தாரா, சமந்தா என இருவர் மீது காதல் வந்தால் எப்படி சமாளிக்கிறார் என்பதை நகைச்சுவையாக சொல்லும் கதை தான், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.
படம் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டு பின்பு தள்ளி போய் இப்போது அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. அனிருத் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ‘டூ டூ’, ‘நான் பிழை’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ராம்போ, கஜிதா, கண்மணி ஆகிய கதாப்பாத்திரங்களில் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நேற்று சென்னையில் முடிவடைந்திருக்கிறது.
இதனை படக்குழு கேக் வெட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், கஜிதாவுக்கு, கண்மணியின் அன்பு பரிசு என நயன்தாரா , சமந்தாவுக்கு தோடு பரிசளித்திருக்கிறார். இதனை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
**ஆதிரா**