ADVERTISEMENT

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வருமா? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி!

Published On:

| By Santhosh Raj Saravanan

Navodaya schools in Tamilnadu?

“கிராமப்புற ஏழை மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது மொழிக் கொள்கைதான் முக்கியமா?” என்ற விவாதம் தமிழகத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் செயல்பட்டு வரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) பள்ளிகள், தமிழ்நாட்டில் மட்டும் அனுமதிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், “தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைக் கொண்டு வருவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

வழக்கின் பின்னணி என்ன?

குமரி மகா சபா என்ற அமைப்பு தொடர்ந்த பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதம் மிகவும் வலுவானது. “மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி, உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால், இந்தி திணிப்பு என்ற காரணத்தைச் சொல்லி தமிழக அரசு இந்தப் பள்ளிகளைத் தடுத்து வருகிறது.

ADVERTISEMENT

இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளில் நவோதயா பள்ளி மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறும்போது, அந்த வாய்ப்பு நம் மாணவர்களுக்கு மறுக்கப்படுவது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

நீதிமன்றத்தின் கண்டிப்பு:

ADVERTISEMENT

வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் ஆர்.விஜயகுமார் அடங்கிய அமர்வு, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. பின்னர், “இந்த விவகாரத்தில் மாணவர்களின் நலனே முக்கியம். எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் ஆகியோர், மத்திய அரசின் அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதில் நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்கள் குறித்து விவாதித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்து, அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய 8 வார கால அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அரசியல், மொழிக் கொள்கை:

1986ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட நவோதயா பள்ளிகள், மும்மொழிக் கொள்கையைப் (Three Language Formula) பின்பற்றுகின்றன. அதாவது தாய்மொழி மற்றும் ஆங்கிலத்துடன், இந்தியும் கற்பிக்கப்படும். ஆனால், அண்ணா காலத்தில் இருந்தே தமிழகம் ‘இருமொழிக் கொள்கையை’ (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றி வருகிறது. நவோதயா வந்தால் இந்தி உள்ளே வந்துவிடும் என்பதுதான் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் நீண்ட கால நிலைப்பாடு.

தற்போது நீதிமன்றம் “பேச்சுவார்த்தை நடத்துங்கள்” என்று உத்தரவிட்டுள்ள நிலையில், திமுக அரசு தனது கொள்கையில் உறுதியாக இருக்குமா? அல்லது மாணவர்களின் நலன் கருதி விதிகளில் தளர்வு செய்யுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share