”தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அளிக்கப்படும் அநீதியாக இருக்க கூடாது” என ஒடிஷா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். naveen patnaik two suggestions on jac meeting
சென்னையில் தமிழக அரசின் சார்பில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 3 மாநில முதலமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் சார்பில், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் அமர் பட்நாயக் மற்றும் முன்னாள் அமைச்சர் சஞ்சய் தாஸ்பர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில், கூட்டுக்குழு கூட்டத்தில் ஒடிஷாவில் இருந்து வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் அம்மாநில முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, ”மாநிலங்களின் ஜனநாயக உரிமையை காப்பதற்கான, பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான மிக முக்கியமான கூட்டம் இது.
நாட்டின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம், பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கி வெற்றியும் பெற்றன.
ஒருவேளை இந்த மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் அது நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கும்.
இந்த நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது சரியாக இருக்காது. அப்படி நடந்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அளிக்கப்படும் அநீதியாகவே இருக்கும்.
பல ஆண்டுகளாக ஒடிசா மாநிலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மாநிலங்களை மத்திய அரசு இப்போது தண்டிக்கிறது. மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களிலையே மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இரண்டு கோரிக்கைகள்! naveen patnaik two suggestions on jac meeting
இந்த நிலையில் மத்திய அரசுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை விடுக்கிறேன்.
ஒன்று, தொகுதி மறுசீரமைப்பில் மக்கள் தொகையை மட்டுமே அளவீடாக கருதக்கூடாது.
இரண்டாவது, தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அனைத்து குறைபாடுகளையும் களைந்து ஜனநாயகத்தை வலுபடுத்தும் வகையில் அதை அமல்படுத்த வேண்டும்.
இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.