அவ்வப்போது சர்ச்சைகளுக்கு உள்ளாகும் அமைச்சர் செஞ்சி மஸ்தான், சத்தம் போடாமல் சில நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் 142 -ஆம் ஆண்டு பசலி வருவாய்த் தீர்வாயம் நிறைவு விழா வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஜூன் 22 ஆம் தேதி நடந்தது. இதில் கலந்துகொண்டு 1003 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் செஞ்சி மஸ்தான். இந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு சாதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட இருந்த நிலையில்…
அவர்கள் வந்தவுடன் மேடையில் அமர்ந்திருந்த கலெக்டர், சப் கலெக்டர், மற்றும் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரை சற்று எழுந்திருக்கச் சொன்னார் அமைச்சர் செஞ்சி மஸ்தான். அனைவரும் திகைக்க, ‘ஒரு அஞ்சு நிமிசம்’ என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டவர், அந்த இருக்கைகளில் சாதிச் சான்றிதழ் பெறுவதற்காக வந்த நரிக்குறவர்களை அமர வைத்தார். தயங்கித் தயங்கி மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அவர்கள் அமர்ந்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் எல்லாரும் சமுதாயத்தில் சம அந்தஸ்து பெறும் வகையில் முதல்வர் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இன்று அதிகாரிகள் எல்லாம் அமர்ந்திருந்த இருக்கைகளில் இவர்களை அமர வைத்து இந்த சான்றிதழை வழங்க இருக்கிறோம்.

ஏனென்றால் இந்த சான்று மூலம் இவர்களின் சந்ததியினர் கல்வி கற்று, அடுத்த தலைமுறையினர் இதேபோல அதிகாரிகளாக இந்த இருக்கைகளில் அமர வேண்டும். அதற்காகவே அதிகாரிகளின் இருக்கைகளில் அமரவைத்து சான்றிதழை அளிக்கிறோம்” என்று சொல்லி ஒவ்வொருவருக்காய் சாதிச் சான்றுகளை வழங்கினார் அமைச்சர் செஞ்சி மஸ்தான். அரங்கில் இருந்தவர்கள் நெகிழ்ச்சியாக கைதட்டி வரவேற்றனர். அதிகாரிகளும், ‘இந்த சம்பவம் அவர்களால் மறக்க முடியாததாக இருக்கும்’ என்றனர்.
நரிக்குறவ மக்களுக்கோ இனம் புரியாத இன்ப அதிர்ச்சி.
–வேந்தன்