மாமல்லபுரத்தில் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு நேப்பியர் பாலம் சதுரங்க பலகை போல் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய அடையாளமாக நேப்பியர் பாலம் உள்ளது. இந்த பாலம் 1866-ல் இருந்து 1872 வரை அப்போதைய சென்னையின் கவர்னராக இருந்த பிரான்சிஸ் நேப்பியரால் 1869 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதனால் தான் இந்த பாலம் நேப்பியர் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலம் 151 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
ஆரம்பத்தில் இரும்பு பாலமாகத் தான் இருந்தது. இரும்பு பாலமாக இருந்த போது இரண்டு முறை சேதம் அடைந்தது. பிறகு கான்கிரீட் பாலமாக கட்டப்பட்டது. 2010 ஆம் ஆண்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேலும் அழகு சேர்க்கப்பட்டது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு கருப்பு வெள்ளை வண்ணம் அடித்து செஸ் போர்டு போல் மாற்றப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சதுரங்க ஒலிம்பியாட் நடைபெற உள்ளது. இதில் சுமார் 2000 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சதுரங்க ஒலிம்பியாட்டுக்கான” தம்பி என்ற வேட்டி சட்டை” அணிந்த குதிரை சின்னத்தை அதிகாரபூர்வமாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் ஜூன் 9 ஆம் தேதி வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து நேற்று (ஜூலை 15) சதுரங்க ஒலிம்பியாட்டுக்கான விளம்பரக் (டீசர்) காட்சியை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். அதில், நேப்பியர் பாலம் சதுரங்க பலகை போலவே வண்ணம் தீட்டப்பட்டு காட்சியளிக்கும். தற்போது அதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதோடு சென்னை மக்களும் ஆர்வமுடன் சென்று நேப்பியார் பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
மோனிஷா
