மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மூச்சுத் திணறல் மற்றும் வயது முதிர்வு சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நல்லகண்ணு (101) சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று மதியம் அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
100 வயதைக் கடந்த நிலையிலும் பொதுவாழ்வில் இயங்கி வந்த அவரது உடல்நிலை குறித்த செய்தி சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் விரைவில் நலம்பெற வேண்டும் எனப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நல்லகண்ணு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
