திருநெல்வேலியில் ஆகஸ்ட் 22-ந் தேதி நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜகவின் தேர்தல் பணிகளை பூத் முகவர்களில் இருந்து தொடங்கி உள்ளார். பூத் முகவர்களில் போலியானவர்கள் நீக்கப்பட்டு சரியான முகவர்களை வைத்து நெல்லையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தும் பணிகளில் நயினார் நாகேந்திரன் முழு வீச்சில் இறங்கி இருக்கிறார்.
நெல்லை பூத் முகவர்கள் மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30 சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேரில் சென்று நெல்லை மாநாட்டு ஆலோசனைக் கூட்டங்களில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றிருந்தார். இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றன.
இந்த நெல்லை மாநாட்டில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அல்லது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய 3 பேரில் ஒருவர் வரவேண்டும் என டெல்லிக்கு கோரிக்கையும் நயினார் நாகேந்திரன் வைத்திருந்தார். இதனை நமது மின்னம்பலத்தில் எழுதி இருந்தோம்.

ஆகஸ்ட் 17 மாநாடு ஒத்திவைப்பு
இந்த நிலையில் இன்று தமிழக பாஜக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், “நாகாலாந்து ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான இல.கணேசன் அவர்களின் மறைவையொட்டி, திருநெல்வேலியில் நடைபெற இருந்த பூத் பொறுப்பாளர்கள் மாநாடு (ஆக.17) ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது தமிழக பாஜக.
ஆகஸ்ட் 22-ல் மாநாடு- அமித்ஷா பங்கேற்பு
இதனிடையே திருநெல்வேலியில் நடத்த திட்டமிருந்த பூத் முகவர்கள் மாநாடு ஆகஸ்ட் 22-ந் தேதி நடைபெற இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருநெல்வேலியில் ஆகஸ்ட் 22-ந் தேதி நடைபெறும் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தரப்பு ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.
மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பதால், பூத் முகவர்கள் தவிர தென் மாவட்ட பாஜகவினரையும் திரட்டும் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
