சாதி ரீதியிலான பிரச்சினைகளை படமாக எடுப்பது சரியில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (அக்டோபர் 22) செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ”டெல்டா மாவட்டத்தின் சொந்தக்காரர் என தமிழக முதல்வர் தன்னை சொல்லிக் கொள்கிறாரே தவிர உண்மையில் டெல்டா மாவட்டத்தின் மீது அக்கறையில்லாமல் செயல்படுகின்றார் . 12 லட்சம் ஹெக்டேர் நிலப்பகுதி நீரில் மூழ்கி உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல்லை வைக்க முடியாத நிலை இருக்கிறது. 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என தெரிவித்த அவர்,
கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் கேட்கின்றனர் என குற்றம்சாட்டினார்.
தமிழக அரசின் சாதனை
மேலும் ரூ.890 கோடிக்கு மது விற்பனை செய்து இருப்பது மட்டும்தான் தமிழக அரசு செய்த சாதனை. கடந்த ஆண்டை விட 150 கோடி ரூபாய் வரை அதிகம் என்பதுதான் இந்த அரசின் சாதனை. இது கூடிய விரைவில் இது மாற்றி அமைக்கப்படும்” என்றார்.
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு செல்ல இப்பவும் அச்சம் இருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு,
”அவர் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்பது தெரியவில்லை. ஒவ்வொருவரின் பார்வையும் வேறுவேறாக இருக்கும். திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் நான் சார்ந்த சமூகம் அதிகம் கிடையாது. அனைத்து சமூகமும் எனக்கு ஓட்டு போடுகின்றனர். ஒவ்வொருவரின் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் இருக்கும். எனக்கு பைசல் பண்ண தான் தெரியுமே தவிர பைசன் தெரியாது . சாதி ரீதியிலான பிரச்சினைகளை படமாக எடுப்பது சரியில்லை” என்று தெரிவித்தார்.
