மகாராஷ்டிரா மாநிலம் சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னர் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்புகள் நாக்பூரில் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. nagpur violence clash tomb
மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மன்னர் ஒளரங்கசீப்பை புகழ்ந்து பேசியதால், சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் அபு அஸ்மி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னர் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு நேற்று (மார்ச் 18) அழைப்பு விடுத்தன.
மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தில் கணேஷ்பேத், மஹால் மற்றும் காந்திபாக் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம் சமூகத்தின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதனையடுத்து நேற்று இரவு நாக்பூரில் இரு சமூகத்திற்கிடையே மதக்கலவரம் வெடித்தது.
இந்த கலவரத்தில் 25 இருசக்கர வாகனங்கள், 3 கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன, பல வீடுகள் சூறையாடப்பட்டன. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் பலர் காயமடைந்தனர். நாக்பூரின் பல பகுதிகளிலும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாக்பூரில் பதட்டத்தை தணிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாக்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி, “சில வதந்திகள் காரணமாக, நாக்பூரில் மத ரீதியான பதற்றம் ஏற்பட்டுள்ளது, எந்தவொரு தவறுக்கும் காரணமானவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இங்குள்ள நிலைமை குறித்து முதலமைச்சருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே அனைவரும் வதந்திகளைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். nagpur violence clash tomb