நாகை எம்.பி.செல்வராஜ் காலமானார்!

Published On:

| By Kavi

நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று (மே 13) காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த நாகை செல்வராஜ் திருவாரூரைச் சேர்ந்தவர். 1989, 1996, 1998, 2019 என 4 முறை நாகையில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ADVERTISEMENT

நாகை செல்வராஜ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் மூச்சுத்திணறல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று(மே 13) காலமானார்.

ADVERTISEMENT

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,

“எம்.செல்வராஜ், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஏழை விவசாயி முனியன் – குஞ்சம்மாள் தம்பதியரின் மகனாக 1957 மார்ச் 16 ஆம் தேதி பிறந்தவர்.

ADVERTISEMENT

சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.

பள்ளிக் கல்வியை முடித்து திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.

மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்ட அவர், அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் இடைநிலைக்குழு உறுப்பினர், துணைச் செயலாளர், செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்து ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர், தேசியக் குழு உறுப்பினர் என பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவர்.

ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம் என பிரித்து அமைக்கப்பட்ட போது திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டவர்.

1989 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக மக்களவைக்கு சென்றவர். தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர்.

1989 ஜூன் 12 காவிரி நதிநீர் பிரச்சினை மீது நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை முதல் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா வரை 110 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியதில் முன்னணி பங்கு வகித்தவர்.

ஓஎன்ஜிசி தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்களை அணி திரட்டி தொழிற்சங்கம் அமைத்து தந்தவர், தமிழ்நாடு ஏஐடியூசி துணைத் தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வந்தவர்.

எம்.செல்வராஜ் சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ளும் சிகிச்சை பெற்றவர். இவரது சகோதரி சாரதாமணி சிறுநீரகம் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் கட்சி பொறுப்புகளையும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தொகுதிப் பிரச்சினைகளிலும் சலிப்பறியாது, சோர்வு அடைந்து, ஓய்ந்து விடாமல் முனைப்போடு செயல்பட்டு முன்னுதாரணமாக திகழ்ந்து வந்த தலைமைத்துவம் கொண்ட மக்கள் ஊழியரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி இழந்து நிற்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய எம்.செல்வராஜ், எம்.பி., உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 02.40 மணிக்கு காலமானார்

நாளை (14.05.2024) காலை 10 மணியளவில் சித்தமல்லி கிராமத்தில் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.

அவரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம் கூறி, அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் கமலவதனம், மகள்கள் செல்வப்பிரியா, தர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கட்சி அமைப்புகள், செங்கொடியினை அரைக் கம்பத்திற்கு இறக்கி விட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: நீச்சலடிக்க போறீங்களா… இதிலெல்லாம் கவனம் தேவை?

ஒரே வாரம்… ஒரு லட்சத்தை கடந்த பொறியியல் விண்ணப்பப் பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share