ஈரோடு கிழக்கு: களமிறங்கும் ‘நாம் தமிழர்’!

Published On:

| By Kavi

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அமமுக போட்டியிடுவது குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 27ஆம் தேதி அறிவிக்க உள்ளார்.

ADVERTISEMENT

நாம் தமிழர் கட்சியும் தேர்தலில் களம் இறங்க உள்ளது. இது தொடர்பாக சென்னை உட்பட 11 மாவட்ட நிர்வாகிகளுடன் சீமான் இன்று ஆலோசனை நடத்தினார்.

நாளை அவரது தலைமையில் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற இருக்கிறது.

ADVERTISEMENT

இது தொடர்பாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், “மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. வரும் 29ஆம் தேதி ஈரோட்டில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெறும். நான் போட்டியிடவில்லை. பெண் வேட்பாளர் களம் இறக்கப்படுவார்.

யாருடைய விமர்சனத்தை பற்றியும் எனக்கு கவலையில்லை. எங்களுடைய நோக்கம் வெற்றி பெற வேண்டும். 

ADVERTISEMENT

ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி என எத்தனை அணி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை .நாங்கள் தனித்து போட்டியிடுவோம்.

எதிரிகள் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதற்காக நாங்கள் சண்டையிடவில்லை. பலமாக இருந்தாலும் சண்டை இடக்கூடிய ஆட்கள் நாங்கள்.

மற்றவர்கள் எல்லாம் கூட்டணி வைத்து தான் போட்டியிடுவார்கள். எங்களைப் போன்று தனித்து நிற்க சொல்லுங்கள் பார்ப்போம்.

அவர்கள் எல்லாம் ஒரு தொகுதிக்கு 100 முதல் 150 கோடி வரை செலவு செய்வார்கள். எங்களிடம் கோடிகள் இல்லை என்றாலும் கொள்கைகள் இருக்கிறது.

இரவில் கோழி பிடிப்பது போல் அவர்கள் வாக்காளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என பட்டியல் எடுத்து கொண்டு பண பட்டுவாடா செய்வார்கள்.

தேர்தல் பறக்கும் படை என்று ஒன்று இருக்கிறது. அது காசு கொடுப்பவர்களை எல்லாம் பிடிக்காது. வியாபாரிகளிடமும் மருத்துவமனைக்கு செல்வோரிடமும் இருக்கும் பணத்தை தான் பிடிப்பார்கள். அது ஒரு அநியாயப்படை.

இடைத்தேர்தலைப் பொறுத்தவரை ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்று கிடையாது. எம்ஜிஆர் இடைத்தேர்தலில் நின்று வென்று இருக்கிறார்.

மக்கள் மாற்றத்தை விரும்பினால் ஆளும் கட்சியாவது எதிர்க்கட்சியாவது. ஆளும் கட்சி தான் வெல்லும் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

இவர்களுக்கெல்லாம் வாக்குக்கு காசு கொடுக்க பணம் இருக்கும். ஆனால் முதியோர்களுக்கு உதவித் தொகை கொடுக்க பணம் இருக்காது. கூட்டணி கட்சிகள் எல்லாம் ஆதரவு தெரிவித்தாலும் பாஜக  வெற்றி பெறாது” என்றார்.

பிரியா

கோகுல்ராஜ் கொலை: அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு!

பாஜக தனித்து போட்டியிடுகிறதா? – கே.பி.ராமலிங்கம் பரபரப்பு பேட்டி!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share