அடுத்தடுத்து 5 அதிரடி சதங்கள்… யார் இந்த ஜெகஜால ஜெகதீசன்?

Published On:

| By christopher

கிரிக்கெட் உலகில் தற்போது எல்லோரும் உரக்கப் பேசிக் கொண்டிருக்கும் ஒரு வீரர் என்றால் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் நாயகன் நாராயண் ஜெகதீசன் தான்.

நாராயண் ஜெகதீசன் யார்? எப்போது கிரிக்கெட்டைத் தொடங்கினார்? இதற்கு முன்னால் ஆடிய ஆட்டங்களில் எப்படி ஆடியிருக்கிறார்? தற்போது விஜய் ஹசாரே போட்டியில் ஜெகதீசனின் ஆட்டம் எப்படி இருக்கிறது? என்பதைப் பற்றி கொஞ்சம் விரிவாய்ப் பார்க்கலாம்.

விஜய் ஹசாரே ட்ராபி கடந்த 12 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆடிய ஆட்டத்தில் மட்டும் 277 ரன்களை குவித்து சாதனை படைத்திருக்கிறார் என்.ஜெகதீசன். அது மட்டுமல்லாமல் உலகத்திலேயே தொடர்ந்து ஆடிய 5 ஆட்டங்களிலும் சதம் அடித்து யாரும் செய்யாத வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் என்.ஜெகதீசன்.

கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கக்கூடிய ஒரு இளம் வீரர் நாராயண் ஜெகதீசன். இளம் வயதில் இருந்து கிரிக்கெட் மீதிருந்த தன்னுடைய ஆர்வத்தால் கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் சரியாய் பயன்படுத்தியிருக்கிறார்.

முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீகில் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் . அதன் பின்னர் பல்வேறு போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தை நிரூபித்து ஐபிஎல் போட்டிகளில் 2020ஆம் ஆண்டு உள்நுழைந்தார் ஜெகதீசன்.

ஜெகதீசனை சோதித்த ஐபிஎல்!

மிகச்சிறந்த ரைட் ஹேண்டட் கிரிக்கெட் வீரராகவும் , விக்கெட் கீப்பராகவும் ஆடி வந்த ஜெகதீசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் களமிறங்கினார்.

2020 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற என்.ஜெகதீசன் தொடர்ச்சிய அடுத்த ஆண்டுகளில் அளிக்கப்பட்ட சிறு சிறு வாய்ப்புகளிலும் பெரிய அளவில் இம்பிரேசன் செய்யாத காரணத்தினால் விமர்சனங்களுக்கும் உள்ளானார் ஜெகதீசன்.

அதன் பின்பு, வரும் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தினை முன்னிட்டு தமிழக வீரர்கள் ஜெகதீசன் மற்றும் ஹரி நிஷாந்த் இருவரும் கழற்றிவிடப்பட்டனர்.

இதற்கு காரணமாக இருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட மிகச்சிறிய வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறப்பட்டது.

n jagadeesan 5 tons record history

ஜெகதீசன் ருத்ரதாண்டவம்!

இந்நிலையில் தான் தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே தொடரில் தன்னை விமர்சித்த அத்தனை பேரையும் மிரட்டும் அளவிற்கு ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார் ஜெகதீசன்.

ஆண்டுக்கொரு முறை நடைபெறும் விஜய் ஹசாரே தொடரில் களம் கண்டுள்ள தமிழ்நாடு அணி மோதிய ஐந்து ஆட்டங்களில் அனைத்திலும் வெற்றி. அது மட்டுமில்லாமல் இந்த ஆண்டு விஜய் ஹசாரேவில் தமிழ்நாடு அணியின் பெயரை மிக ஓங்கி ஒலிக்கவிட்டதற்கும், நம் அணியின் வெற்றியைப் பறைசாற்றியதற்கும் ஒரு பெயர் முக்கிய காரணமாய் இருக்கிறது என்றால், அது ஜெகதீசன் தான்.

முதல் ஆட்டம் மழையால் நின்று போனது எல்லோருக்கும் தெரியும், இரண்டாம் ஆட்டமானது ஆந்திரப்பிரதேசத்திற்கு எதிராக 112 பந்துகளுக்கு 114 ரன்கள்,
அடுத்து மூன்றாவது ஆட்டம் ஆலூரில் நடைபெற்ற சத்தீஸ்கருக்கு எதிரான ஆட்டம்.
அதில் 107 ரன்களை குவித்தார்.

நான்காவது ஆட்டத்தில் தமிழ்நாடு அணி கோவாவை எதிர்கொண்டது. அதில் 140 பந்துகளுக்கு 168 ரன்கள் எடுத்து முத்திரைப் பதித்தார் ஜெகதீசன்.

ஹரியானாவிற்கு எதிரான ஐந்தாவது ஆட்டத்தில் 128 ரன்கள் என எடுத்து எல்லோராலும் பேசப்பட்ட ஒரு ஆட்டக்காரராய் மாறினார் நாராயண் ஜெகதீசன்.

அதன் தொடர்ச்சியாக இன்று (நவம்பர் 21) நடைபெற்ற அருணாச்சலப்பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி அபாரமாய் ஆடி 435 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் ஜெகதீசனின் பங்கு அளப்பறியது. 50 ஓவரில் நடக்கும் விஜய் ஹசாரே ட்ராபி தொடரில் கிட்டத்தட்ட 141 பந்துகளை எதிர்கொண்டு 277 ரன்களை குவித்துள்ளார். இந்த மாதிரியான ஆட்டத்தை இதுவரை யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை.

n jagadeesan 5 tons record history

ஜெகதீசனின் வரலாற்று சாதனை!

யாரை பார்த்து ஸ்பார்க் இல்லை என்று சொன்னார்களோ இன்று அந்த ஜெகதீசன் தான் கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தில் இன்று ஒரு பெரிய இம்ப்ரசனை உருவாக்கி இருக்கிறார்.
இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் குமார் சங்ககரா தொடர்ச்சியாக நான்கு சதங்களை அடித்திருந்தார். அதன் பின்பு தென் ஆப்பிரிக்க அணி வீரர் பீட்டர்சன் நான்கு போட்டிகளில் சதம் அடித்திருக்கிறார்.

இந்தியாவை எடுத்துக்கொண்டோம் என்றால், கடந்த ஆண்டு 2021 விஜய் ஹசாரே போட்டிகளில் கர்நாடக அணியைச் சேர்ந்த படிக்கல் நான்கு போட்டிகளில் தொடர்ந்து சதமடித்திருக்கிறார்.

இதுவே உலகளவில் உச்சபட்ச சாதனையாக இருந்து வந்த நிலையில், இந்தாண்டு விஜய் ஹசாரே போட்டிகளில் அசுர ஆட்டத்தைக் காட்டி தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் சதமடித்து எல்லா சாதனைகளையும் பின்னுக்குத் தள்ளி உலக கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தில் மாபெரும் சரித்திரத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஜெகதீசன்.

பல்வேறு விமர்சனங்களை கேட்டு வந்த ஜெகதீசனுக்கு இது மாபெரும் டர்னிங் பாயிண்ட். அவரை ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே வெளியே அனுப்பினால் என்ன?இனி இவரை ஐபிஎல் ல் மினி ஏலத்தில் தன் அணிக்கு எடுக்க போட்டா போட்டி போடுவார்கள் மற்ற அணியினர் என்கின்றனர் மூத்த கிரிக்கெட் வீரர்கள்.

தன்னால் முடியாது என்று எதுவும் இல்லை என்று ஒரு தனிமனிதன் முடிவு செய்தால் எதுவுமே சாத்தியம் தான் என்பதற்கு ஜெகதீசன் மிகப்பெரிய சாட்சி.

பவித்ரா பாலசுப்பிரமணியன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share