nமீண்டும் கிளம்பும் போஃபர்ஸ் ஊழல் வழக்கு!

Published On:

| By Balaji

போஃபர்ஸ் ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது.

1987இல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ஸ்வீடன் நாட்டிலுள்ள போஃபர்ஸ் என்ற கம்பெனியிடமிருந்து பீரங்கிகளை வாங்கியதில் ஊழல் செய்து விட்டதாக் குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கட்சியின் ஆட்சியும் கவிழ்ந்தது.

ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகும் பல வழக்குகள் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், 2004இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வழக்கு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தீர்த்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

போஃபர்ஸ் பீரங்கிகள் ஊழல் தொடர்பாக புகார் கூறப்பட்ட இந்துஜா சகோதரர்களுக்கு எதிரான, அனைத்து வழக்குகளையும் 2005ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அப்போது சிபிஐ, திட்டமிட்டது. ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியானது.

சில நாட்களுக்கு முன், போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் தொடர்பாக, தனியார் துப்பறிவாளர் மைக்கேல் ஹெர்ஷ்மாம் சில குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கப்போவதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்துஜா சகோதரர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 12 ஆண்டுகளுக்கு பின் அனுமதி கேட்டு கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியது. இதற்கு தற்போதைய ஆளும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .

இதையடுத்து, போஃபர்ஸ் ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ நேற்று (2 பிப்ரவரி ) மேல்முறையீடு செய்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அப்பீல் செய்வது சரியாக இருக்காது என அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரிந்துரை செய்திருந்த நிலையிலும், சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளது. இருப்பினும், சிபிஐயிடம் சில வலுவான ஆதாரங்கள் இருப்பதால்தான் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share