தம்பியின் சிலைக்கு ராக்கி கட்டிய சகோதரி!

Published On:

| By Balaji

நக்சல் தாக்குதலில் மரணமடைந்த சகோதரரின் நினைவாக, அவரது சிலைக்கு ராக்கி கட்டியுள்ளார் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்.

வடஇந்திய மாநிலங்களில், சகோதரத்துவத்தின் மதிப்பினை வலியுறுத்தும்விதமாக ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சகோதரிகள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி எனும் கயிற்றைக் கட்டுவது வழக்கம். தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ராக்கி கயிறு விற்பனை அதிகளவில் நடந்தது.

ADVERTISEMENT

ரக்‌ஷா பந்தனையொட்டி, மரணமடைந்த தனது சகோதரருக்கு மரியாதை செலுத்தினார் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண். இந்தச் சம்பவம், அப்பகுதிவாசிகளின் கவனத்தைக் கவர்ந்தது.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டிவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி உட்கே. இவரது சகோதரர் ராஜேந்திரகுமார் கெய்க்வாட், மத்தியப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்தார். 2014ஆம் ஆண்டு, நக்சல் தாக்குதலொன்றில், அவர் மரணமடைந்தார். ராஜேந்திரகுமாரின் நினைவைப் போற்றும் வகையில் தனது வீட்டு வளாகத்தில் சிலை வைத்துள்ளார் சாந்தி. ஒவ்வொரு ஆண்டும், ரக்‌ஷா பந்தன் தினத்தன்று தனது தம்பியின் நினைவாக அமைத்துள்ள சிலைக்கு அவர் ராக்கி கட்டி வருகிறார்.

ADVERTISEMENT

அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 26) ராஜேந்திரகுமார் சிலைக்கு அவர் ராக்கி கட்டினார். மரணித்துப் போனாலும், ஒவ்வோர் ஆண்டும் சகோதரரின் நினைவாக ரக்‌ஷா பந்தன் கொண்டாடுவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார் சாந்தி. “டோங்பால் என்ற ஊரில் வேலை பார்த்து வந்தார் எனது சகோதரர். 2014இல் சுக்மா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் அவர் மரணமடைந்தார். அவருக்கு ராக்கி கட்ட முடியாவிட்டாலும், அவர் எனது சகோதரர் என்பதில் இப்போது பெருமைப்படுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share