காதலர் தினம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது நியூயார்க்கில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
1994ஆம் ஆண்டு ஆக் என்ற இந்தித் திரைப்படம் மூலம் அறிமுகமானார் சோனாலி பிந்த்ரே. தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதினைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட இந்திப்படங்களில் கதாநாயகியாக நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருகிறார். இந்தி தவிர கன்னடம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளிலும் நடித்த இவர் தமிழில் `காதலர் தினம்’, `கண்ணோடு காண்பதெல்லாம்’ ஆகிய படங்களில் நடித்தார். அதில் குணாலுக்கு ஜோடியாக நடித்த காதலர் தினம் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமின்றி, பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தன. 2013க்குப் பிறகு முழுமையாகத் திரைப்படங்களில் இருந்து விலகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
நேற்று(ஜூலை 4) இவர் தனது [ட்விட்டர்](https://twitter.com/iamsonalibendre/status/1014400756223479808) பக்கத்தில், சமீபத்தில் தனக்கு புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது எனப் பதிவிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். இது குறித்து சோனாலி அந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, எனது உடலில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரை சந்தித்து சில பரிசோதனைகளை மேற்கொண்டேன். இந்தப் பரிசோதனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இப்போது இதற்காக நான் நியூயார்க்கில் சிகிச்சை பெற்றுவருகிறேன். என்னுடைய குடும்பம் மற்றும் சுற்றத்தாரும் நண்பர்களும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். தொடர்ந்து சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை எதிர்த்துப் போராடி நான் மீண்டு வருவேன். எனது நலனுக்காகப் பிரார்த்திக்கும் அத்தனை பேரின் அன்புக்கும் நன்றி” எனத் தெரிவித்திருக்கிறார்.
இவருக்கு ஆதரவளிக்கும் விதமாக பாலிவுட் பிரபலங்களும் நம்பிக்கையான வார்த்தைகளுடன் ட்வீட் செய்துவருகிறார்கள். இதைத் தொடர்ந்து தனது குடும்பத்துடன் நியூயார்க் சுற்றுலா சென்றுள்ள நடிகர் அக்ஷய் குமார், அங்கு சிகிச்சை பெற்று வரும் சோனாலியை, நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். பின் ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்தப் பேட்டியில், “சோனாலி ஒரு போராளி என்று எனக்குத் தெரியும், அவருக்கு உடல் நலம் குணமடைய கடவுள் உதவி செய்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.�,”