திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் ‘மர்ம வெடி சப்தம்’ இன்றும் (டிசம்பர் 16) பொதுமக்களை ‘குலை நடுங்க’ வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது தாழ்வாக விமானங்கள் பறப்பது, திடீரென பயங்கர வெடிசப்தம் கேட்பது என்பது தொடர் நிகழ்வாகி வருகிறது.
வெடிசப்தம் என்பது ஏதோ ஒரு பகுதியில் கேட்பது இல்லை.. திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் கேட்கக் கூடிய அளவுக்கு பூமியை அதிரவைக்கும் இந்த வெடிசப்தம்.
இன்று காலை 9.38 மணிக்கும் இதே போல பயங்கர வெடிசப்தம் கேட்டது. முன்னரை விட இன்றைய வெடிசப்தம் பயங்கர அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் வீடுகளில் பாத்திரங்கள் உருண்டு விழுந்தன; ஜன்னல்கள், மேஜைகள் அதிர்ந்தன. திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர், திண்டுக்கல், நத்தம், குஜிலியம்பாறை வட்டங்கள் என சுமார் 40 கிமீ சுற்றளவுக்கு இந்த அதிர்வுகள் உணரப்பட்டன.
இத்தகைய வெடிசப்தத்தின் பின்னணி என்ன என்பது குறித்து ஊடகங்கள் பல முறை கேள்வி எழுப்பியும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் விரிவான அல்லது தெளிவான விளக்கம் தரவில்லை.
திண்டுக்கல்- கரூர் மாவட்ட எல்லையான ரங்கமலை- கருமலை பகுதிகளில் பல ஆண்டுகளாக கனிமவள ஆய்வு என்ற பெயரில் மத்திய அரசின் புவியியல் துறை அதிகாரிகள் ‘ஏதோ’ ஒரு ஆய்வை நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வு குறித்து எந்த விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை. இப்படி ஒவ்வொரு முறை வெடிசப்தம் கேட்கும் போதும், புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக மாவட்ட நிர்வாகம் ஒரு விளக்கம் கொடுக்கும்.. ஆனால் அந்த ஆய்வு முடிவு என்ன என்பது இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
