இயக்குனர் மிஷ்கின் பங்கேற்கிற திரையுலக மேடைகள் என்றால் பரபரப்பு செய்திகளுக்குப் பஞ்சமே இருக்காது. அந்தளவுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றியோ, நபரைப் பற்றியோ சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டுச் சென்றுவிடுவார்.
அது பற்றி எரிந்தபிறகு, ‘இனிமே இது மாதிரி மேடைகளுக்கு வர வேணாம்னு நினைக்குறேன்’ என்று சொல்வார். அப்படிப்பட்ட மிஷ்கின் சிறிது இடைவெளிக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்றால் அந்த மேடை என்னவாகியிருக்கும்?
‘அதெல்லாம் ஒண்ணும் நடக்காது’ எனும்விதமாக, ராம் இயக்கிய ‘பறந்துபோ’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மேடை ஏறினார் மிஷ்கின்.
தொடர்ச்சியான வேலைப்பளுவால் தூக்கமே இல்லை என்று சொன்னபடி பேசத் தொடங்கியவர், ‘சில வருஷத்துக்கு முன்னால சிவாவை ஒரு பார்ட்டியில பார்த்தேன். அப்ப நாம ஒரு காமெடி படம் பண்னுவோமான்னு கேட்டான். என்ன காமெடி பண்றியான்னு கேட்டதும் ஓடிப் போயிட்டான்’ என்றார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே, ‘நீ வான்னு சொல்றதால கோவிச்சுக்கிடாத சிவா’ என்றார். பதிலுக்கு சிவா கமெண்ட் அடித்தபோதும், விடாமல் பேச்சைத் தொடர்ந்தார்.
இயக்குனர் ராம் தன்னை அழைத்து இந்த படத்தில் நடிகர் மம்முட்டி போன்று சிவா நடித்திருப்பதாகக் கூறியதாகவும், அதனைத் தான் நம்பவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், படம் பார்த்தபிறகு பன்முகம் கொண்ட நடிகராகச் சிவா தெரிந்ததாகக் கூறினார்.
’இன்னிக்கு மிஷ்கின் சார் என்ன பேசப் போறார்னு பார்க்கத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்’ என்று ஏற்கனவே மிர்ச்சி சிவா தெரிவித்திருந்த நிலையில், இந்த பாராட்டு அவரது நலம்விரும்பிகளை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும். Mysskin praised Mirchi Siva
தன் மகனோடு சேர்ந்து ஒரு பயணத்தை மேற்கொள்கிற தந்தை, மகன் வழியாக வாழ்க்கை பாடங்களைக் கற்றுக் கொள்வதே இதன் கதை என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், ‘திரைப்பட விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நல்லதாகச் சொன்னால் பெருமையடைகிறவர்கள் மோசமாகச் சொல்கிறபோது மட்டும் கோபப்படுவது சரியல்ல’ என்று தெரிவித்தார்.
இப்படிச் சில விஷயங்களைப் பேசினாலும், சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதையும் தான் பேசாததாக மிஷ்கின் கருதினார். அதை வெளிப்படையாகவும் கூறினார். அடுத்த மேடையில் ஏதாவது பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். Mysskin praised Mirchi Siva
