கர்நாடகாவின் பிரபலமான உணவு வகைகளில் இந்த மைசூர் ரசத்துக்கு தனி இடம் உண்டு. சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் மைசூர் ரசம் வைத்து சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.
என்ன தேவை?
பருப்பு வேகவைத்த தண்ணீர் – ஒன்றரை லிட்டர்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 2
பூண்டு – 5 பல்
கடுகு – சிறிதளவு
உளுந்து – அரை டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
அரைக்க:
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
சீரகம் – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, தட்டிய பூண்டு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் கரைத்த புளித் தண்ணீரை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கொதிக்க வைத்து, பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும். லேசாக நுரைத்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மைசூர் போண்டா
கிச்சன் கீர்த்தனா : கதம்ப சாம்பார்!