மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் தலைவர் ஆங்சான் சூகிக்கு, மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங்சான் சூகி. இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.
எனினும், இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங்சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுவது, கொரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் வழக்குகள் என ஆங்சான் சூகி மீது 11 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன.

இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் சூகிக்கு சுமார் 23 ஆண்டுகள் வரை மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இன்னொரு ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மியான்மர் ராணுவ நீதிமன்றம் விதித்தது. இதன்மூலம் சூகிக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவர் மீதான மேலும் 5 குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை மியான்மர் ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி ஆங்சான் சூகிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவருக்கு மொத்தம் 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
பாமக பற்றி பிரசாந்த் கிஷோர்: பொதுக்குழுவில் அன்புமணி தகவல்!
பெண்களுக்கு எதிரான வன்முறை: மணல் சிற்பத்தைப் பார்வையிட்ட முதல்வர்!