தமிழ் சினிமாவில் அச்சு ஊடகங்கள் மட்டும் இருந்த காலங்களில் சினிமா செய்திகள், விமர்சனங்களுக்கு திரைப் பிரபலங்கள் மத்தியில் மரியாதை இருந்தது. எப்படி விமர்சனம் வருமோ என்கிற பதற்றம் இருந்தது. பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக காட்சி முடியும்போது படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர்கள் பத்திரிகையாளர்களின் கருத்துகளை அறிய காத்திருப்பார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையதளங்கள், யூடியூப் அசுர வளர்ச்சி அடைந்தபின் படத்தின் முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களில் திரைப்பட விமர்சனங்கள் வெளியாகிவிடுகிறது. தொடக்கக் காலங்களில் இதை திரைத் துறை பிரபலங்கள் ரசித்தனர். அதுவே வரம்பு மீறியபோது அதை எதிர்கொள்வதற்கு சரியான வழிகாட்டல், புரிதல் இல்லாமல் தடுமாறினார்கள்.
ஒவ்வொரு தயாரிப்பாளர், இயக்குநர், நட்சத்திரங்கள் தங்களுக்கான விசுவாசிகளாக இணையதளச் செய்தியாளர்கள், யூடியூப் விமர்சகர்கள் கொண்ட குழுக்களை உருவாக்கி கொண்ட போக்கு தமிழ் சினிமாவில் தலைதூக்கியது. தங்களுக்குப் பிடிக்காதவர்களை இவர்கள் மூலம் விமர்சிப்பதும், சேதாரப்படுத்தவும் செய்தனர். புலிவாலை பிடித்த செயலாக வாலை விட்டால் நம்மை கடித்துவிடும் என்கிற மனநிலையில் இன்றைக்கு சினிமா பிரபலங்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.
இணையதள விமர்சனமும், யூடியூப் விமர்சனங்கள் வணிகமயமாகிவிட்டது என்கிற குற்றசாட்டு நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் யூடியூப் விமர்சகர் ஒருவருக்கு எதிராக டிசம்பர் 10 அன்று வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் இயக்குநர் ஸ்ரீஜர் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது…
“ரிவ்யூவர் இட்டிஷ் பிரஷாந்த் அவர்களுக்கு, முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீஜர்… சமீபத்தில் எனது இயக்கத்தில் வெளிவந்தமுருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தைப் பற்றி தாங்கள் மிக மோசமான ஒரு விமர்சனம் செய்திருந்தீர்கள். ஒரு திரைப்படத்தை இயக்கிவிட்டு வந்து விமர்சனம் செய்யுங்கள் என்று உங்களிடம் கூற மாட்டேன். காரணம் அது அறிவு சார்ந்தது.
நிற்க… தாங்கள் ஏதோ இந்த சமூகத்தைக் காப்பாற்ற வந்த புனிதர் போலவும்… நான் ஏதோ இந்த சமூகத்தை சீரழிக்க வந்தவன் போலவும் பேசி இருக்கிறீர். உங்களுக்கு ஏன் இந்த வன்மம். உங்களுக்கு பெய்டு ரிவ்யூவர் என்றொரு பெயர் இருக்கிறது என்பதை இந்த நாடே அறியும். தயாரிப்பாளர் உங்களுக்கு பணம் தரவில்லை என்று சொன்னால் உங்கள் விருப்பத்துக்கு விமர்சனம் செய்வீர்கள்.
முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் பெருவாரியான மக்களுக்குப் பிடித்த படம். இளைஞர்கள் கொண்டாடும் திரைப்படம். உங்களது தவறான விமர்சனத்தால் நிறைய பேரை குழப்பி விட்டிருக்கிறீர்கள்.
ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இந்தத் திரைப்படத்தை அனுபவியுங்கள், ஆராய வேண்டாம் என்று கூறி வருகிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் அடல்ட் ஜோக்குக்குப் பெண்கள் சிரித்து மகிழ்கிறார்கள் என்று பலர் எனது முக நூல் பக்கத்திலும் வாட்ஸ்அப்பிலும் எழுதி வருகிறார்கள். அதுதான் இந்தப் படத்துக்கு சரியான விமர்சனம்.
நிற்க… எனது தயாரிப்பாளரைப் பற்றி தாங்கள் கிளப் ஹவுஸில் தவறாகப் பேசி இருக்கிறீர்கள். எனது தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பெரிய அளவில் சினிமாவை நேசிக்கும் மனிதர். அவரைப் போன்றவர்களால்தான் சினிமா வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மேலும் நீங்கள் இந்தத் திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனம் தொழில்நுட்பம் பற்றி அறிவுபூர்வமான கேள்விகள் கேட்டிருந்தால் உங்களை அறிவாளியாக மதித்து நானே பதில் கூறி இருப்பேன். ஆனால், உங்கள் விமர்சனம் முழுவதும் பழி வாங்கும் நோக்குடன் வன்மம் கலந்து வெளிப்படுகிறது.
கிட்டத்தட்ட நான் இருபது வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறேன். நிறைய படிப்பவன். நிறைய திரைக்கதை பற்றிய நூல் அறிவும் தேடல்களும் உள்ளவன். என்னை அவ்வளவு சாதாரணமாக நீங்கள் எடை போட்டுவிட வேண்டாம்.
விமர்சனம் என்கிற பெயரில் நீங்கள் பால் குடிக்கும் தாயின் மார்பை அறுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில் வடியும் குருதியை பால் என நினைத்து குடித்துக் கொண்டிருக்கிறீர்கள். தாய் உயிருடன் இருக்கும் வரைதான் நீங்களும் உயிர் வாழ முடியும். என் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் போன்றோர் அந்த தாய்க்கு சமமானவர்கள்.
இந்த விமர்சனம் மூலம் வந்த பணத்தில் உங்கள் வீட்டு உலையில் கொதிக்கும் ஒவ்வொரு அரிசியும் என் தயாரிப்பாளர் உங்களுக்கு போட்ட பிச்சை. அந்தச் சோற்றில் கை வைக்கும்போது உங்களுக்கு உடம்பு கூச வேண்டும்.
என் குடும்பம், உங்கள் குடும்பம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு அவர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் உணவளித்து வருகிறார். அவரால் நீங்கள் உங்கள் மனைவி, குழந்தைகள் பசியாறுகிறீர்கள். ஆனால், உங்களால் அவர் தொழிலில் வருவாய் இழப்பு. இதை நீங்கள் உணர்ந்தது உண்டா…
மேலும் உங்கள் மோசமான விமர்சனங்களுக்கு உள்ளான நிறைய இயக்குநர்கள் வளர்ந்து விட்டார்கள். ஆனால் நீங்கள்? நான் என் அடுத்த பட வேலைகளை ஆரம்பித்து விட்டேன். என் தயாரிப்பாளரும் அடுத்த படத்தின் தயாரிப்பில் தீவிரமாகி விட்டார். ஆனால் நீங்கள் அடுத்து யாரிடம் கையேந்தலாம் என யோசியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
**-இராமானுஜம்**
�,