வரும் ஜூன் 22ஆம் தேதி மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முகூர்த்தக்கால் கடந்த மே 28ஆம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நாட்டப்பட்டது. Murugan devotees’ conference to unite Hindus!
தேர்தலுக்கு இன்னும் ஒருவருடத்திற்கு குறைவான காலமே உள்ளது. பாஜக கூட்டணிக்கு சிறுபான்மையினரின் ஓட்டுகள் கிடைக்காது என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள இந்துக்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவே முருக பக்தர்கள் மாநாடு தயாராகி வருகிறது.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களை பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி கட்சியினர் மற்றும் பாஜகவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
மாநாட்டிற்கு தொண்டர்களை திரட்டும் பணியில் மாவட்டந்தோறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தை நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜக தலைவர்கள் நேற்று கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் இருந்து தொடங்கியுள்ளனர்.

பாஜக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த மாநாட்டுக்கும் தடை கேட்டு சில அமைப்புகள் போராடி வருகின்றன. சங் பரிவார் அமைப்புகள் நடத்தும் மாநாடு ஆன்மிக மாநாடு அல்ல, ஆன்மிகத்தின் பெயரில் நடத்தப்படும் அரசியல் மாநாடு.
எனவே அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் உருவாக்கும் நோக்கத்தோடு நடத்தப்பட உள்ளதாக கூறி முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த தடை விதிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
