திருமணத்தை உதறிவிட்டு… இரவோடு இரவாக சென்னைக்கு ஓடிவந்த முனீஸ்காந்த்: ஷாக் ஆன மாமன் பட இயக்குநர்!

Published On:

| By christopher

munishkanth who elope from his house for cinema

சினிமாவிற்காக தனது திருமணத்தையே உதறிவிட்டு இரவோடு இரவோடு டப்பிங் பேச சென்னை ஓடி வந்தார் நடிகர் முனீஸ்காந்த் என மாமன் பட இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் கூறியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. munishkanth who elope from his house for cinema

ஜிவி பிரகாஷின் புரூஸ்லி மற்றும் விமலின் விலங்கு வெப்சீரிஸை தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வரும் 16ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் மாமன்.

இந்த படத்தில் சூரி, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகை சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் சினியுலகம் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் முனீஸ்காந்த் குறித்து கூறிய கருத்து பலரையும் ஈர்த்துள்ளது.

அதில் அவர் பேசுகையில், ”முனீஷ்காந்த் என்னிடம் ஒன்று சொன்னார். ’சினிமாவை நீங்கள் எந்த அளவுக்கு காதலிக்கிறீர்களோ அந்த அளவுக்கு சினிமா உங்களை கைவிடாது’ என்று கூறினார்.

முனீஸ்காந்திற்கு அப்போதே வயதாகிவிட்டது. ஆனால் சினிமாவில் நடிப்பதற்காக அவர் போராடி வந்தார். அதை என் கண்ணாலேயே பார்த்தேன்.

நாங்கள் ஒரு குறும்படம் எடுத்தோம். அந்த குறும்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்திருந்தார். அதன்பின்னர் ஒருநாள் அவரை டப்பிங்கிற்காக அழைக்க நான் அவருக்கு போன் செய்தேன்.

என்னிடம் பேசிய அவர், நான் ஊரில் இருப்பதாகவும், இன்று இரவுக்குள் வந்து விடுகிறேன்’ என போனை வைத்துவிட்டார். அதேபோல் இரவே வந்துவிட்டார். டப்பிங் அறை இருட்டாக இருந்ததால் நான் அவரை முதலில் கவனிக்கவில்லை.

அதன்பின்னர் டப்பிங் முடிந்து வெளியே வந்து பார்த்தால், அவரின் உடம்பெல்லாம் பெயிண்ட் மற்றும் சுண்ணாம்பு இருந்தது.

என்னாச்சுண்ணே என்று கேட்டதற்கு, ”நான் ஊருக்குப் போனேன். ஆனால் என்னை யாரும் திருப்பி அனுப்பவில்லை. ஊரிலேயே கடை வைத்து தருவதாக கூறி, திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தார்கள். மேலும் பெண் பார்க்க எல்லாம் போய்விட்டோம். அந்த பெண்ணுக்கும் என்னைப் பிடித்துவிட்டது.

அதன்பின்னர் பெண் வீட்டார் எங்கள் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்கள். அதனால் வீட்டிற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டு இருந்தேன். அப்போதுதான் நீங்கள் டப்பிங் என்று போன் செய்தீர்கள். நான் வீட்டிலேயே குளித்துவிட்டு கிளம்பினால் கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால்தான், ஆடைகளை மட்டும் ஒரு மஞ்சப்பையில் எடுத்துக்கொண்டு அதை கொல்லைபுறத்தில் போட்டுவிட்டு, டீ குடிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, கொல்லைக்கு போய் பையை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்” என்றார்.

நான் உடனே, ”அப்போ உங்க கல்யாணம்? என்று கேட்டேன். அதற்கு அவர், ”அவ்வளவுதான் தலைவரே, இதற்கு மேல் நான் ஊருக்குப் போனால் விடமாட்டார்கள்” என்று கூறினார்.

சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அதுவும் ஒரு குறும்படம் டப்பிங்கிற்காக ஒரு மனிதன் இந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் குறும்படத்தில் டப்பிங் பேசியதைப் பார்த்த பின்னர்தான் அவர் பேசிய ஸ்லாங் பிடித்து போய் முண்டாசுப்பட்டி படத்தில் முனீஸ்காந்த்தாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் இயக்குநர் ராம். அதுதான் அவரது வாழ்க்கையே மாற்றியது. சினிமா தான் உங்களை காப்பாத்தும்னு நெனைச்சி உழைச்சா, அது காப்பாத்தும். அந்த விசயத்துல முனீஸ்காந்து தான் எனக்கு உதாரணம்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share