எலிமினேட்டர் போட்டியில் குஜராத அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மும்பை அணி 2வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் தொடரில் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான எலிமினேட்டர் போட்டி சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நேற்று (மே 30) இரவு நடைபெற்றது. mumbai thrill win over gujarat at eliminator
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக இந்த தொடர் முழுவதும் தடுமாறி வந்த அனுபவ வீரர் ரோகித் சர்மா 81 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக மற்றொரு துவக்க பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ 47 ரன்கள் குவித்தார்.

குஜராத் அணி தரப்பில் பிரஷித் மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
தொடர்ந்து 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் அணிக்கு அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் (1) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் பட்லருக்கு பதிலாக இப்போட்டியில் களமிறங்கிய குஷால் மெண்டிஸும் 20 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

எனினும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஸன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் பொறுப்புடனும், அதிரடியாகவும் விளையாடி அணியின் வெற்றிக்காக போராடினர். தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் குவித்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுந்தர் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சதமடித்து அணியின் வெற்றியை சுதர்ஸன் உறுதி செய்வார் என குஜராத் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தவறான ஷாட்டால் 80 ரன் எடுத்த அவர் கிளீசன் பந்தில் கிளீன் போல்டானார்.

அப்போது கடைசி 24 பந்துகளில் 59 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு இருந்தது.
ஆனால் அதன்பின்னர் இம்பேக்ட் பிளேயராக களம் கண்ட ரூதர்போர்ட் (24), திவாட்டியா (16) மற்றும் ஷாருக்கான் போராடினாலும், அந்த அணி 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று 2வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது.
அதே வேளையில் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குஜராத் அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.
இதனையடுத்து வரும் 1ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியை சந்திக்க உள்ளது மும்பை அணி.
