டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பிளேஆஃப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. mumbai register victory against dc and enter play off
கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் மும்பை இந்தியன்ஸ் அணியை நேற்று (மே 21) இரவு எதிர்கொண்டது டெல்லி அணி.
வான்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற அந்த அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
அந்த அணி 18வது ஓவர்கள் முடியும் போது 132 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. இதனால் வெற்றி டெல்லி பக்கமிருந்தது. ஆனால் களத்தில் இருந்த சூர்யகுமார் – நமன்தீர் ஜோடி கடைசி இரு ஓவர்களை விளாசி தள்ளியது.

முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் குவித்தது. தொடர்ந்து சமீரா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 21 ரன்கள் கிடைத்தது.
இதனால் கடைசி 12 பந்துகளில் மட்டும் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து, தன்னைத் தானே பாதாளக் குழியில் தள்ளிக்கொண்டது டெல்லி அணி. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் 73 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் வீரர்கள் சீரான வேகத்தில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி (39) விப்ராஜ் (20) அஷ்தோஷ் (18) மற்றும் கே.எல்.ராகுல் (11) மட்டுமே இரட்டை இலக்க ரன்னை எட்டினர்.
மும்பை அணியின் தரமான பந்துவீச்சில் அந்த அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மும்பை அணி தரப்பில் மிட்செல் சாண்ட்னர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், வில் ஜாக்ஸ், கர்ண் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றது மும்பை அணி.
டெல்லி அணி 6வது அணியாக ஐபிஎல் தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி (டெல்லி) தனது முதல் நான்கு ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்ற பிறகு பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது இதுவே முதல்முறை.
