முல்லைப் பெரியாறு: அனைத்து வழக்குகளும் ஒரே அமர்வில் விசாரணை!

Published On:

| By Selvam

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் – கேரளா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் சட்டப்போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலை தொடர்கிறது. இதை தீர்க்கும் வகையில், அணை தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வில் விசாரிக்க வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதியிடம் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. Mullaperiyar dam case

தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே பல்வேறு விவகாரங்களை உருவாக்கியுள்ள முல்லைப் பெரியாறு அணையைப் பற்றிய வழக்குகள், கடந்த பல ஆண்டுகளாக இந்திய நீதிமன்றங்களில் தொடரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அணையின் பாதுகாப்பு, நீர்மட்ட நிலை நிர்ணயம், பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகமும் கேரளமும் மாறுபட்ட கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றன.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தமிழக அரசு தனது வாதங்களை முன்வைத்தது.

தமிழகத்தின் சார்பில், “இந்த வழக்கை கடந்த 25 ஆண்டுகளாக கேரளா தேவையற்ற முறையில் இழுத்தடித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதே அந்த மாநிலத்தின் ஒரே நோக்கமாக உள்ளது. இதற்காக தமிழகத்துக்கு என்னென்ன தடைகள் உருவாக்க முடிகிறதோ, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது” என வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தின் இந்தக் கோரிக்கைகளை பரிசீலித்த நீதிமன்றம், முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில், அணையின் மேலாண்மை தொடர்பாக அடுத்த ஒரு வாரத்திற்குள் மேற்பார்வைக் குழுக்கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் தமிழகத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பிரச்னைகள் முன்வைக்கப்பட வேண்டும்.

இதற்கான தீர்வுகள் இரண்டு வாரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும், எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய அறிக்கையை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், “தமிழகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அது கேரளாவுக்கு பேரழிவாக மாறும் என்ற ஒரு தவறான நம்பிக்கையை உருவாக்க முயற்சி செய்யப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையைப் பற்றிய வழக்குகள் பல்வேறு நீதிமன்ற அமர்வுகளில் சிதறி கிடக்கின்றன. எனவே, அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு பட்டியலிடப்பட வேண்டும்” என தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக நீடிக்கும் சட்டப்போராட்டத்துக்கு இந்த உத்தரவு ஒரு முக்கிய பரிமாணத்தை அளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Mullaperiyar dam case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share