நம் உரிமையை மீண்டும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்று சொல்ல டெல்லி செல்கிறேன் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. ஆனால் இம்முறை திமுகவிடம் அதிகத் தொகுதிகளும், ஆட்சி அதிகாரத்தில் பங்கும் வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆளும் கட்சியான திமுக, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமையகமான டெல்லி இந்திரா பவனில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, எம்பி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் இன்று (சனிக்கிழமை, ஜனவரி 17) நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில்,
“இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன்.
எனக்காக அல்ல.. என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காக..
அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்..
இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்க்கட்சித் தலைவரிடமும் கருத்து சொல்ல..
நம் உரிமையை மீண்டும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்று சொல்ல..
மதவெறிக் கும்பலைத் தோற்கடிக்க வேண்டும். அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல. நட்புக்கு தோள் கொடுப்போம்.
உரிமைக்கு குரல் கொடுப்போம். ஆட்சியில்பங்கு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
