யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு மிகத் தெளிவாக தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும் என கனிமொழி எம்.பி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 29ம் தேதி மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகளை பார்வையிட திமுக எம்பியும், மகளிர் அணி செயலாளரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான கனிமொழி இன்று (டிசம்பர் 23 ) கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “திமுக தேர்தல் அறிக்கை குழு கோவையில் இருக்கும் நிர்வாகிகளிடம் கலந்து பேசி கருத்து கேட்கும் தேதி முடிவு செய்யப்படும். கோவையில் தொழில் துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும் என்றார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும், மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
இங்கிருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்கப்படும்.மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு , எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை வாக்குறுதியாக கொடுப்போம். அதில் எண்ணிக்கை என்று எதுவும் கணக்கு இல்லை” என்றார்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, “அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பல விமர்சனங்களை சில பேர் வைப்பார்கள், அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இங்கே இருக்கக்கூடிய நபர்களுக்கு உண்மை நிலைதெரியும், இதற்கு மேல் சொல்லத் தேவையில்லை” என்றார்.
இளைஞர்கள், பெண்கள் சிறுபான்மையினர் வாக்குகள் தவெகவிற்கு செல்லுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு மிகத் தெளிவாக தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும், முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்” என உறுதிபட தெரிவித்தார்.
