mp election pmk Compete in 10 constituencies
பாஜக – பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் இன்று (மார்ச் 19) காலை கையெழுத்தானது. அதன்படி 2024 மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாஜகவுடன் கூட்டணி என்று நேற்று நடந்த பாமக உயர்மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து இன்று காலை தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சென்றனர்.
அங்கு பாஜக – பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து இருக்கட்சித் தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “கடந்த 10 ஆண்டு காலமாக பாமக டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாமக என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது.
நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர இந்த முடிவை நாங்கள் எடுத்தோம்.
60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களிடையே வெறுப்பான சூழல் இருக்கிறது. மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது.
அதை பூர்த்தி செய்யத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெறுவார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “ராமதாஸ் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம். இன்று வலிமையான கூட்டணி அமைந்துள்ளது. மாற்று அரசியலை கொண்டு வர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கக் கூடியவர் அன்புமணி ராமதாஸ்.
தமிழக அரசியல் நேற்று இரவில் இருந்து மாறியிருக்கிறது. இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். 2026ல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும்.
ராமதாஸ் எங்களை அன்போடு வரவழைத்தார். கோவையில் இருந்து இரவோடு இரவாக இங்கு வர காரணம், ஒரே மேடையில் பிரதமர் மோடியோடு ராமதாஸ் ஐயாவை அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசைதான்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் சேலத்தில் நடைபெறும் பாஜக மாநாட்டிற்கு வருவதற்கு இசைவு தெரிவித்துள்ளனர்” என்றார்.
தொடர்ந்து எத்தனை தொகுதிகள் பாமகவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “2024 தேர்தலில் பாமக என்.டி.ஏ கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும். அதற்கான முடிவெடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்தெந்த தொகுதி என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என கூறினார்.
ராஜ்ய சபா எம்.பி சீட் உண்டா என்ற கேள்விக்கு, ‘எல்லாம் பேசுவோம்’ என பதிலளித்தார் அண்ணாமலை.
தொடர்ந்து, பாமக போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அன்புமணி ராமதாஸ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா