நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் அதை பற்றி குழப்பிக்கொண்டிருக்காதீர்கள் என்று இளைஞரணி மாநாட்டில் ஸ்டாலின் தெரிவித்தார்.
சேலம் மாநிலம் பெத்தநாயகன்பாளையத்தில் இன்று (ஜனவரி 21) திமுக இரண்டாவது இளைஞரணி மாநாடு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் , “இங்கே பேசிய துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியிருக்கிறார்கள். இவற்றை புத்தகமாக அச்சடித்து வழங்க வேண்டும். அப்போதெல்லாம் கட்சி மாநாடுகள் 3,4 நாட்கள் நடைபெறும். ஏனென்றால் கட்சித் தொண்டர்களுக்கு இதுபோன்ற செய்திகளை சொல்வதற்கு மாநாடு ஒன்றே கருவியாக இருந்தது. ஆனால் இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஒரு வீடியோ மூலம் பல லட்சம் பேரை சென்றடைய முடியும்.
ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகளை நசுக்கி வருகிறது. தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, அதை பார்வையிட ஒன்றிய அமைச்சர்கள் வந்தார்கள். ஒன்றிய குழு வந்தது. பிரதமரே இங்கு வந்தார். அவர்களிடமெல்லாம் நிவாரண தொகை கேட்டோம். ஆனால் இதுவரை ஒரு பைசா வரவில்லை.
மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் என்று நாம் கேட்பது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரியா ஜனதா தளம், கம்யூனிஸ்ட் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் சேர்த்துதான் நாம் மாநில சுயாட்சி கேட்கிறோம்.
இங்கே கூடியிருக்கும் உங்களை பார்த்து எனக்கு லட்சம் பேரின் சக்தி வந்துவிட்டது. நாட்டின் தெற்கே வந்த விடியல் வடக்கிலும் வந்து சேரும்.
தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணி பிரிவு என்பது பாஜக போட்டுக்கொடுத்த திட்டத்தின்படி எடப்பாடி பழனிசாமி ஆடும் உள்ளே, வெளியே நாடகம்.
தேர்தல் வேலைகளுக்காக குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கூட்டணியையும் வேட்பாளர்களையும் நான் பார்த்துகொள்கிறேன். நீங்கள் அதை பற்றி குழப்பிக்கொண்டிருக்காதீர்கள். வெற்றி பெறுபவரே வேட்பாளர்.
எனது தாய் வீடு இளைஞரணி. அங்கே உழைத்துதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். எனவே, தொடர்ந்து உழையுங்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற உயரம் உங்களுக்கு கிடைக்கும்” என கூறினார் மு.க.ஸ்டாலின்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
”பாஜக உள்ளேயே யுத்தம் ஆரம்பித்துவிட்டது” : ஆ.ராசா
சாய் பல்லவி வீட்டில் விசேஷம்… வெளியானது நிச்சயதார்த்த புகைப்படம்!