அழகே உருவாக இருக்கும் சிலருக்கு வாயைச் சுற்றி, வாயின் உள் மற்றும் வெளிப்புறங்களைத் தாக்கக்கூடிய தோல் நோய் அக்கரம் என்னும் வாய்ப்புண் [Mouth ulcer]. இது எந்த வயதிலும், யாரையும் பாதிக்கலாம்.
பொதுவாக வாய் ஓரங்கள், கன்னத்தின் உட்பகுதி, நாக்கு, அண்ணம், உதடு முதலிய பகுதிகளில் வலியுடன் கூடிய சிவந்த புண்கள், வெடிப்புகள் காணப்படும்.
புண்கள் சிவப்பு அல்லது லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். சூடான, காரமான பொருட்களை உண்ண முடியாதபடி எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தும்.
வலி காரணமாக பேசவோ, உணவு உட்கொள்ளவோ சிரமம் ஏற்படும். வாயில் நீர் ஊறல், காய்ச்சல், வாய் துர்நாற்றம் போன்றவையும் இருக்கலாம்.
செரிமான உறுப்புகளின் கோளாறுகளே இது ஏற்பட்ட பொதுவான காரணம்.
வைட்டமின் பி12, சி மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற உயிர்ச்சத்துக் குறைபாடுகளாலும் இரும்புச்சத்துக் குறைபாட்டாலும் வரலாம். வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளாலும் வரக்கூடும்.
உடல் சூடு, வாய் மற்றும் பற்களின் சுகாதாரக் குறைவு, பற்களின் சீரற்ற அமைப்பு, சாப்பிடும்போது நாக்கைக் கடித்து விடுவது, உணவு மற்றும் மருந்துகள் ஒவ்வாமை, நாள்பட்ட புகை, மதுப்பழக்கம், ஹார்மோன் மாறுபாடு, சில நோய் நிலைகள், கர்ப்பகாலம், நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு, போதிய அளவு தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் மரபியல் காரணமாகவும் வாய்ப்புண் வரலாம்
“வயிறு சுத்தமாக இருந்தாலே, வாய்ப்புண்கள் ஏற்படாது. மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் குளிர்ச்சியாக இருக்க, அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சத்தான காய்கறிகள், முளை கட்டிய பயறு வகைகள், பால், தயிர், மோர், நெய், முட்டை, மணத்தக்காளிக்கீரை, பசலைக்கீரை வெந்தயக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பற்கள் மற்றும் வாயை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படாதவாறு, தியானம் மற்றும் யோகாசனப் பயிற்சிகள் செய்ய வேண்டும்
ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை உப்பு நீரில் வாயைக் கொப்புளித்தல் மிகச் சிறந்த தீர்வாக அமையும்.
அதிக சூடான மற்றும் அதிக காரமான உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். உணவுப் பாதையில் கோளாறு கண்டிருந்தால், அவற்றைத் தக்க முறையில் மருத்துவம் செய்ய, அதனால் உண்டான வாய்ப்புண் குணப்படும்.
வெகு நாள்களாக வாய்ப்புண்கள் ஆறாமல் இருந்தால், அதுவே அரிதாக வாய் புற்றுநோய்க்கு அறிகுறியாக இருக்கலாம்.
எனவே, வாய்ப்புண் ஆறாவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, அதற்கான முறையான சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: ஈரோட்டில் ஸ்டாலின் முதல் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் வரை!
கிச்சன் கீர்த்தனா: பீர்க்கங்காய்ச் சட்னி!
இந்தியாவில் பத்து பைசா கூட கொடுக்காமல் ரயிலில் போகலாம்? எங்கே?
ஆற்றில் இறங்கி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்: பாலம் அமைக்க வலியுறுத்தல்!