ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ”தமிழகம் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம். இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியும் உற்பத்தி வளர்ச்சியும் அடைந்திருக்கும் ஒரே மாநிலம் தமிழகம். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு இருந்த தமிழகத்தில் தொழில் தொடங்க உங்களை அழைக்கிறேன்.
உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாக ஜெர்மனி விளங்குகிறது. நவீன உற்பத்தி பொருளியல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஜெர்மனி வலிமையோடு உள்ளது.
ஐரோப்பாவின் முதுகெலும்பாக விளங்கும் ஜெர்மனிக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வந்ததற்கு பெருமை அடைகிறேன். ஜெர்மனியின் பண்பாடு, தொழில்நுட்பம் புத்தாக்கம் ஆகியவை என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்ட ஜெர்மனி நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழகத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
ஜெர்மனி தமிழகம் இடையே பொருளாதாரத்தில் அதிக ஒற்றுமைகள் உள்ளது. ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கிய தொழில் துறை நாடாக இருக்கிறதோ அதேபோல் இந்திய ஒன்றியத்தில் தொழில்துறையின் இதயத்துடிப்பாக தமிழகம் விளங்குகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தமிழகம் தான் இந்தியாவின் ஜெர்மனி.
முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் கிட்டதட்ட 54 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் என தமிழ்நாட்டுக்கும் ஜெர்மனிக்கும் இடையே பொருளாதார உறவு மூலமாக இந்த நிலையை நாம் இன்னும் பலப்படுத்திக் கொள்ள இயலும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வெறும் முதலீட்டிக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. ஜெர்மனி தமிழகம் ஆகிய பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் உருவாக்க வந்திருக்கிறேன் என்றார்.
மேலும், ”முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “TNRising என்ற ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அவற்றின்மூலம், 9,000-க்கும் மேற்பட்டோருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியும்.
ஒட்டுமொத்தத்தில், ஜெர்மனி பயணத்தில் ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன்மூலம், தமிழகத்தில் 15,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
