திருமணம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தனது மகளின் வருங்கால கணவருடன் ஓடிப்போன பெண் ஒரு வாரத்திற்கு பின் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். மேலும் தனது வருங்கால மருமகனை காதலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். mother in law loves bridegroom who elope from home
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மட்ராக் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தம்பதியர் ஜிதேந்திரகுமார் -அனிதா தேவி (வயது 40). இவர்களது மகள் ஷிவானி.
ஜிதேந்திரகுமார் பெங்களூருவில் வேலைபார்த்து வரும் நிலையில், அவரது மகள் ஷிவானிக்கு, உத்தரகாண்ட்டில் வேலை செய்யும் ராகுல் என்பவருடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.
நேற்று ஏப்ரல் 16ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடந்த 6ம் தேதி மணப்பெண்ணின் தாய் அனிதா தேவி, தனது மகளின் வருங்கால கணவரான ராகுலுடன் மாயமாகி விட்டார்.
இதுபற்றி மதராக் காவல்நிலையத்தில் புகாரளித்த அனிதாவின் கணவர் ஜிதேந்திர குமார் கூறுகையில், “என் மனைவி எங்கள் மகளின் வருங்கால கணவருடன் மணிக்கணக்கில் பேசுவாள், ஆனால் அது இப்படி முடிவடையும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. அவள் எங்களை நாசமாக்கிவிட்டாள். அதோடு மகளின் திருமணத்திற்காக சேர்ந்து வைத்திருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கப்பணம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் தூக்கிச்சென்று விட்டாள்” என்று குற்றஞ்சாட்டினார்.
அதே போன்று மணப்பெண் ஷிவானி கூறுகையில், “ராகுல் என் தாயாருக்கு போன் வாங்கி கொடுத்த நிலையில், இருவரும் கடந்த மூன்று நான்கு மாதங்களாக போனில் அதிகம் பேசி வந்தனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். என் தாயார் கொண்டு சென்ற பணம் மற்றும் நகைகளை எங்களிடம் திருப்பித் தர வேண்டும்” என விரக்தியுடன் பேசினார்.
இதனையடுத்து மதராக் காவல்நிலைய அதிகாரி மகேஷ் குமார் தலைமையிலான போலீசார், மாயமான இந்த விநோத காதல் ஜோடியைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சரியாக 10 நாட்களுக்கு பின் ஓடிப்போன அனிதா – ராகுல் ஜோடி நேற்று டாடன் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.
ராகுலுடன் வாழ விரும்புகிறேன்!
சரணடைந்த அனிதா, தன்னுடைய கணவர் ஜிதேந்திர குமாரும், அவருடைய தாயாரும் உடல் ரீதியாக தொடர்ந்து தாக்கி வந்ததாகவும், அதனால் தான் மருமகனுடன் ஓடிப்போனேன் என்று போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இப்போது ராகுலை காதலிப்பதாகவும், அவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்த அவர், குற்றஞ்சாட்டியபடி பணம் மற்றும் நகைகளுடன் தான் வீட்டை விட்டு ஓடவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ராகுலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், “அனிதா தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டியதால் அவருடன் ஓடிப்போக ஒப்புக்கொண்டேன். அலிகார் பஸ் நிலையத்தில் நான் அவரை சந்திக்கவில்லை என்றால் அவர் தற்கொலை செய்திருப்பார்” என தெரிவித்தார்.
தொடர்ந்து நடந்த போலீசாரின் விசாரணையில், ராகுலின் நண்பர்களின் உதவியுடன் அலிகாரில் இருந்து தப்பிய காதலர்கள், முதலில் லக்னோவுக்கு சென்றனர். அங்கிருந்து முசார்பூருக்கு சென்று, பின்னர் பீகாரின் சீதாமர்ஹியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்கள் நேபாளத்திற்கும் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் தேடுவதை அறிந்த இருவரும் உத்தரபிரதேசம் திரும்பி காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர் என்பது தெரியவந்துள்ளது.
ராகுலுக்கு இது இரண்டாவது முறை!
மேலும், பெண்ணுடன் தப்பியோடுவது ராகுலுக்கு இது முதல் முறை அல்ல என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் ஏற்கெனவே, ஒரு வருடத்திற்கு முன்பு கிராமத்தில் இருந்து வேறொரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் ஓடிப்போய் அவர் காணாமல் போய், இரண்டு மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்தார். எனினும் பெண்ணின் குடும்பத்தினர் அவர் மீது எந்த புகாரும் தெரிவிக்காததால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.