சென்னையில் மழையின் போது இறந்து பிறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வழங்கிய பிணவறை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். Mortuary employee suspended in Chennai
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் வசித்து வந்த கூலி தொழிலாளியான மசூத் பாஷாவின் மனைவி சவுமியா 2ஆவது முறையாக கருவுற்றிருந்த நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஆனால் மழை நீர் தேங்கியதால் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் மசூத் பாஷா சிரமப்பட்டுள்ளார். இந்த நிலையில் சுமார் 1 மணியளவில் வீட்டிலேயே சவுமியாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தால் மட்டுமே தாயையும் சேயையும் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அவசர உதவி எண்களுக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் சவுமியாவையும் குழந்தையையும் மீன்பாடி வண்டி மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மசூத் பாஷா அழைத்து சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனை கதவுகள் மூடியிருந்ததால் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தாயையும் சேயையும் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்த நிலையில் காவல்துறையின் தலையீட்டிற்கு பிறகு சவுமியாவிற்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் குழந்தை இறந்தே பிறந்ததாக கூறியுள்ளனர்.
தொடர்ந்து குழந்தை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மசூத் பாஷா தன்னிடம் பணம் இல்லை என்பதால் பிணவறை ஊழியர்களிடம் குழந்தையை தகனம் செய்ய சொல்லியுள்ளார். ஆனால் பிணவறை ஊழியர்கள் குழந்தையை தகனம் செய்ய ரூ.2,500 கேட்டுள்ளனர். இதற்கு மசூத் பாஷா தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஏற்கனவே குழந்தை இறந்த சோகத்தில் இருந்த அவரை காவல்துறையிடம் இருந்து கடிதம் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி காவல்நிலையத்திற்கும் மருத்துவமனைக்கும் அலைக்கழிக்க விட்டுள்ளனர்.
மேலும் குழந்தை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டு 4 நாட்களாகியும் ஒரு தகவலும் இல்லை என்றும் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் குழந்தையை நிச்சயமாக காப்பாற்றி இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் மசூத் பாஷா.
அதுமட்டுமின்றி வேலைக்கு செல்லாமல் வருமானமின்றி தவித்து வரும் சூழலில் இறந்த குழந்தையை கொண்டு வந்து அடக்கம் கூட செய்ய முடியாது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மசூர் பாஷா குழந்தையை அடக்கம் செய்ய அருகில் உள்ள மசூதியில் பேசியிருப்பதாகவும் குழந்தையை கொடுத்தால் கொண்டு வந்து அடக்கம் செய்துவிடுவேன் என்றும் ‘தி நியூஸ் மினிட்’ செய்தி சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இதனையடுத்து மருத்துவமனை பிணவறைக்கு சென்ற மசூத் பாஷாவிடம் குழந்தையை துணியால் சுற்றாமல் ஒரு சாதாரண அட்டைப்பெட்டியில் வைத்துக் கொடுத்துள்ளனர் பிணவறை ஊழியர்கள். பின்னர் குழந்தையை வாங்கிக் கொண்டு வந்து மசூத் பாஷா அடக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் குழந்தையை அடக்கம் செய்ய லஞ்சம் கேட்டதற்கும், அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்ததற்காகவும் பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் அனைவருக்கும் மெமோ கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தையின் உடலை வழங்க லஞ்சம் எதுவும் பெறவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
எம்.பி. பதவி பறிப்பு : சட்ட போராட்டத்தைத் தொடங்கிய மஹூவா மொய்த்ரா
மாயவன் படத்தின் பார்ட் 2 டைட்டில் இது தானா?
Mortuary employee suspended in Chennai