இன்றைய சூழலில் பலரும் தங்கள் செல்போனில் அலாரம் வைத்துத்தான் காலையில் கண் விழிக்கின்றனர். சில நேரங்களில் நாம் அலாரத்தை நிறுத்தி விட்டு மீண்டும் படுக்க ஆரம்பித்து விடுவோம்.
சில நேரம் கண் விழித்தாலும் அலாரத்தை ஆப் செய்து விட்டு மீண்டும் போனை பார்க்க தொடங்கி விடுகிறோம். பின்னர் அவசர அவசரமாக அன்றைய நாளுக்கான வேலைகளை செய்கிறோம். இதனால் அன்றைய நாள் முழுவதும் டென்சனாகவே இருக்கும் சூழல் கூட உருவாகலாம்.
ஆனால் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நாம் தினமும் காலையில் சில விஷயங்களை வழக்கமாக்கி கொள்வது நல்லது.
அந்த விஷயங்கள் உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவக் கூடும். அது குறித்து இங்கு பார்க்கலாம்…
தூக்க நேரத்தை முறைப்படுத்துங்கள்
பொதுவாக அதிகாலையில் எழுந்து கொள்வது நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். ஆனால் பலருக்கும் காலையில் எழுவது பெரும் போராட்டமாகவே உள்ளது. அதனால் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கையிலிருந்து எழுந்து கொள்வதை உறுதிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
சூரிய உதயத்திற்கு முன் எழுந்து கொள்வதால் நம் உடல் உற்சாகமடையும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. மேலும் இது அன்றைய நாளின் பதற்றத்தைத் தவிர்க்க பெரிதும் உதவலாம். ஆனால் நீங்கள் காலையில் எழுந்து கொள்வதற்கு இரவில் சீக்கிரம் படுப்பதும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
செல்போனை தவிர்ப்பது
நீங்கள் காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படி காலை எழுந்தவுடனே செல்போனை பார்ப்பது உங்களின் அந்த நாளுக்கான திட்டத்தையே திசை திருப்ப வாய்ப்பு உள்ளது. இதனால் காலையில் எழுந்தவுடன் சமூக வலைத்தளங்களைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்கலாம்.
தண்ணீர்
காலையில் எழுந்தவுடன் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும் என கூறப்படுகிறது.
மேலும் மனதை அமைதிப்படுத்துவதோடு உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க உதவுகிறது. நீங்கள் விரும்பினால் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம். மேலும் எலுமிச்சை சாறு கலந்த நீரையும் முயற்சிக்கலாம்.
தியானம்
கண் விழித்தவுடன் அவசர அவசரமாக காலை வேலையை துவங்குவதற்கு பதில் குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி, தியானம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
காலையில் 40 நிமிடம் வரை ஜாக்கிங், வாக்கிங் உள்ளிட்ட ஏதோ ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்வது நமது உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்கி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வேலைகளை திட்டமிடுதல்
பொதுவாக நாம் அன்றைய நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு குறிப்பெடுத்து கொள்வது நல்லது. இந்த பழக்கம் நாளடைவில் மிகவும் முக்கியமான வேலைகள் மற்றும் குறைந்த முக்கியத்துவம் கொண்ட வேலைகள் குறித்த தெளிவை நமக்கு தரும். பொதுவாக நாம் வெளியில் செல்லும் வேலைகளுக்கு முறையாக திட்டமிடும் பட்சத்தில் பயண நேரத்தை சரியாக திட்டமிடுவது அவசியம்.
அப்படி செய்யும் பட்சத்தில் கடைசி நேர அவரசத்தை தவிர்க்க இயலும். இதேபோல் காலை நேரத்தில் போதுமான அளவு உணவையும் உறுதிப்படுத்தும் பட்சத்தில் நாம் நாள் நமக்கு நேர்மறையாக இருக்க கூடும்.
