குஜராத்தில் மோர்பி பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் மச்சு ஆற்றுப்பகுதியிலிருந்த கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக ஐபிசி பிரிவுகள் 304 மற்றும் 308ன் கீழ் குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு விபத்தால் ஆற்றில் சிக்கியுள்ளவர்களைத் தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படை,விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களும் மெல்ல மெல்ல வெளி வர தொடங்கி உள்ளன.
ஒரிவா எனும் நிறுவனத்துடன் மோர்பி முனிசிபாலிட்டி நிர்வாகம் 15 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. புனரமைப்பு பணிகளுக்காகக் கடந்த மார்ச் மாதம் பாலம் மூடப்பட்டது.
கிட்டத்தட்ட 7 மாதங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குஜராத் புத்தாண்டை ஒட்டி கடந்த 26ஆம் தேதி பாலம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமான மக்கள் கூட்டம் திரண்டதால் பாலம் எடை தாங்காமல் அறுந்துவிழுந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதில் சில முறைகேடுகள் நடந்திருப்பதும் வெளிச்சத்துக்கு வர தொடங்கியுள்ளது.
பாலத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பதற்கு முன்பு ஒரிவா நிறுவனம் முனிசிபாலிட்டியிடம் இருந்து பாதுகாப்பு சான்றிதழ் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. ஒரிவா நிறுவனம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்குத் தெரிவிக்காமல் தன்னிச்சையாகப் பாலத்தைத் திறந்துள்ளதாக மோர்பி உள்ளாட்சி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
“பாலங்களை மக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பதற்கு முன்பு தொழில் நுட்ப ரீதியிலான சில சோதனைகள் அவசியமாகின்றன. முக்கியமாகப் பாலத்தின் எடை தாங்கும் திறன் சோதிக்கப்பட்ட பிறகே அதை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான தகுதிச் சான்றிதழை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அளிக்க முடியும்” என முன்னாள் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாலம் விபத்து தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பாலம் எப்படி இடிந்து விழுந்தது என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஒரே நேரத்தில் ஏன் இவ்வளவு பேர் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அதுபோன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்தபடியே உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்.
ராஃபிக், பிரியா
கோவையில் அண்ணாமலை: நிகழ்ச்சியில் பங்கேற்காத முக்கிய நிர்வாகிகள்!