குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On:

| By Minnambalam Login1

monkey pox subramanian

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பரவிவரும் குரங்கம்மை நோயை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாகக் கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் குரங்கம்மையை வரவிடாமல் தடுக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

அவர், “கடந்த மாதம் 16-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் கெப்ரேயேசஸ், குரங்கம்மை உலகை அச்சுறுத்த தொடங்கியிருந்ததால் பொதுச் சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து எல்லா நாடுகளும் குரங்கம்மையைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருக்கும் பன்னாட்டு விமானநிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளைச் சோதனை செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் முன்னதாக சென்னையிலும் கோவையிலும் செய்யப்படும் சோதனைகளை மேற்பார்வையிட்டோம். தொடர்ந்து இன்றைக்கு நானும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இது குறித்து ஆய்வு செய்தோம்.

மதுரை மாவட்ட நிலையத்தை பொறுத்தவரை கடந்த வாரம் பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் ஆய்வு செய்தார். ஆகத் தமிழ்நாட்டில் உள்ள நான்கு பன்னாட்டு விமான நிலையங்களிலும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்விமான நிலையங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு காய்ச்சல் மற்றும் குரங்கம்மைக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்குச் சராசரியாக வருகை தரும் 11,850 சர்வதேச பயணிகளுக்குக் காய்ச்சல் மற்றும் குரங்கம்மை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஒவ்வொரு விமான நிலையத்திலும் தனிமைப் படுத்தும் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த பன்னாட்டு விமான நிலையங்கள் அமைந்திருக்கும் நான்கு நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குரங்கம்மையால் பாதிக்கப்படும் நபர்களுக்காக தனிமைப் படுத்தும் அரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாகத் திருச்சியில் உள்ள விஸ்வநாத மருத்துவமனையிலும், சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், மதுரையில் உள்ள ராஜாஜி பொது மருத்துவமனையிலும் மற்றும் கோவையில் உள்ள கோயம்புத்தூர் அரசு பொது மருத்துவமனையிலும் தலா 10 படுக்கைகள் கொண்ட வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் சென்னையில், இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில்  நெகடிவ் பிரெஷர் வார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில், கிருமிகளை உறிஞ்சி வெளியேற்றும் அமைப்பு உள்ளது”என்று தெரிவித்தார்.

மேலும் சமீபமாகத் தமிழகத்தில் பரவி வரும் டெங்குகாய்ச்சல் குறித்த கேள்விக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் “ ஊரக உள்ளாட்சித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை போன்ற 11 துறைகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் டெங்கு பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது” என்று பதிலளித்தார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

“உத்தரவு பிறப்பித்த பிறகு மீண்டும் எப்படி விசாரிக்க முடியும்?” ஜாபர் சேட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

’என் அப்பாவுக்கு மெண்டல் பிரச்னை இருக்கு’: அப்பவே பொசுக்குன்னு சொன்ன யுவராஜ்

பட்டப்பகலில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் : எஸ்.பி விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share