குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜனவரி 26) தேசியக்கோடி ஏற்றினார். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கினார்.
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனம் சிங்கித்துறையை சேர்ந்த மீனவர் யாசர் அராபத், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், நெல்லை மாவட்டம் டேனியல் செல்வசிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தனது மகளின் நினைவாக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய மதுரையைச் சேர்ந்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக வெளியான போலி செய்திகளை கண்டறிந்து, உண்மை செய்திகளை வெளியிட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த Alt News இணை நிறுவனர் முகமது ஜூபேருக்கு மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது.
அதிக உற்பத்தி திறன் பெறும் வேளாண்மைக்கான உழவர் நலத்துறையின் சிறப்பு விருது பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசு மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கும், இரண்டாவது பரிசு நாமக்கல் காவல் நிலையம், மூன்றாவது பரிசு பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
காந்தியடிகள் காவல் பதக்கங்கள் விழுப்புரம் எஸ்.பி சசாங்சாய், தெற்கு சென்னை மத்திய நுண்ணறிவுப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் காசி விஸ்வநாதன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் முனியசாமி, மதுரை மண்டல காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட தலைமை காவலர் ரங்கநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கோவாவுக்கு பதிலாக அயோத்திக்கு தேனிலவு’ – விவாகரத்து கோரிய இளம்பெண்!
