நாட்டில் நடைமுறையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) மாற்றங்களைக் கொண்டு வருவது தொடர்பாக GST கவுன்சில் இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறது.
சுதந்திர தினத்தின் போது (ஆகஸ்ட் 15) டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி பேசிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படுகின்றன; நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் என அறிவித்திருந்தார். மத்திய அமைச்சரவையும் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல் அளித்திருந்தது.
இதனடிப்படையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று (செப்டம்பர் 3), நாளை (செப்டம்பர் 4) ஆகிய இரு நாட்கள் GST கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் GST வரி அமலில் இருந்து வருகிறது. இந்த GST, 5%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளாக உள்ளன.
இந்த 4 அடுக்கு ஜிஎஸ்டி முறையானது 5% மற்றும் 18% என 2 அடுக்குகளாகக் குறைக்கப்படலாம்; 12%-ல் உள்ள பொருட்கள் அனைத்தும் 5% -க்கும் 28%-ல் உள்ள பொருட்கள் அனைத்தும் 18%-க்கும் மாற்றப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் போது பெரும்பாலான பொருட்களின் விலைகள் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
