தேச தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இன்று (அக்டோபர் 2) அஞ்சலி செலுத்தினர்.
தேச தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் உள்ள காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டில் இன்று காலையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோரும், காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல மதங்களின் முறையின்படி பிரார்த்தனை நடத்தப்பட்டது. மேலும் மகாத்மா காந்திக்கு விருப்பமான பாடல்கள் ஒலிக்கப்பட்டது.
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
”காந்திஜெயந்தியை முன்னிட்டு இன்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்த காந்தி ஜெயந்தி இன்னும் சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில் 75வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடி வருகிறோம். எப்போதும் காந்தியின் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்வோம்.
காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கதர் மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குமாறும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
