இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (ஜூன் 3) திங்களன்று புதிய உச்சத்துக்கு உயர்ந்தன.
ஜூன் 1 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான எக்சிட் போல் முடிவுகளில் மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று பிரதமராக மோடி வருவார் என்று கணிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக இன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 2,178 புள்ளிகள்- 2.94% உயர்ந்து 76,139 புள்ளிகளை எட்டியது, அதே நேரத்தில் நிஃப்டி 50 579 புள்ளிகள் – 2.57% உயர்ந்து 9:17 மணிக்கு 23,109 இல் வர்த்தகம் ஆனது.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் தொடர்ந்து முதலீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள் என்றும் இதனால்தான் பங்குச் சந்தை புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது என்றும் ஷேர் மார்க்கெட் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் மட்டும் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள் ரூ.11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
பொதுத்துறை வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, நிதிச் சேவைகள், உலோகங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோ போன்ற முக்கிய துறைகள் 3-5% வரை லாபம் கண்டன.
ரெலிகேர் ப்ரோக்கிங் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ரவி சிங், ”அனைத்து கருத்துக் கணிப்புகளும் பாஜக வெற்றியைக் கூறுகின்றன. இது இன்று சந்தையை சாதகமாக பாதித்துள்ளது.
இருப்பினும், தேர்தல் முடிவுகள் ஜூன் 4 தான் வர இருக்கின்றன. முதலீட்டாளர்கள் ஏற்ற இறக்கங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். இறுதி முடிவுகள் எக்சிட் போல் முடிவுகளைப் போல இருந்தால் இன்னும் சாத்தியமான நம்பிக்கைகள் அதிகரிக்கும்” என்று கூறினார்.
இன்றைய பங்குச் சந்தை உயர்விற்கு இன்னொரு காரணம், கடந்த வாரம் வெளியிடப்பட்ட நான்காவது காலாண்டிற்கான இந்தியாவின் GDP வளர்ச்சி எண்கள் ஆகும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மார்ச் 2024 இல் முடிவடையும் நிதியாண்டில் 8.2% ஆக அதிகரித்தது,
இது உள்கட்டமைப்புக்கான அரசாங்க செலவுகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஏற்றம் ஆகியவற்றால் உந்தப்பட்டது என்றும் கூறுகிறார்கள் வர்த்தக வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
எக்சிட் போல்: எகிறிய பங்குச் சந்தை… அதானியின் அசுர வளர்ச்சி!
Comments are closed.