தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அதே மேடையில், தமிழ்நாட்டில் பாஜக- தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் கூட்டம் இன்று ஜனவரி 23-ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி, ஜிகேவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “நம்முடைய கூட்டணி இந்த தேர்தலில் 210 இடங்களில் வெல்லும்; பெரும்பான்மையான இடங்களில் வெல்லும்; அண்ணா திமுக ஆட்சி அமைக்கும்” என்றார்.
ஆனால் பிரதமர் மோடி பேசுகையில்,”தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது; தமிழ்நாடு இப்போது திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட துடிக்கிறது; தமிழ்நாடு இப்போது BJP-NDA அரசை விரும்புகிறது” என்று எடப்பாடி பழனிசாமியின் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக்கு பதில் தரும் வகையில் பேசினார்.
மேலும், “தமிழ்நாட்டில் பிஜேபியின் என்.டி.ஏ.வின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் அமைவது உறுதியாகிவிட்டது;
பிஜேயின் என்.டி.ஏ. அரசு, தமிழக மக்களின் வாழ்வை மாற்றி அமைக்கும். தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட அரசாங்கம் தேவை எனில், மத்திய அரசுடன் கரம் கோர்த்து இணைந்து பயணிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இணைவோம்” என ஒவ்வொரு முறையும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்று மட்டுமே மோடி குறிப்பிட்டார்.
அதேபோல, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வெளிப்படையாகவும் பிரதமர் மோடி அறிவிக்கவில்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலாவது பிரசார கூட்டம், ‘முதல்வர் வேட்பாளர் யார்’ என்பதை அறிவிக்காமலே முடிந்துள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரை தவெக தலைவர் விஜய், எப்படியும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருவார் என நம்பிக் கொண்டிருக்கிறது. மேலும் அமித்ஷா தரப்பில் விஜய்யிடம் பேசும் சிலர், “முதல்வர் வேட்பாளர் யார் என நாங்கள் இன்னமும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நீங்க கூட்டணிக்கு வாங்க.. தேர்தலை சந்திப்போம்.. தேர்தல் முடிந்த பின்னர் முதல்வர் யார்? துணை முதல்வர் யார்? என்பது குறித்து முடிவு செய்யலாம்” கூறியிருப்பதாக நாம் டிஜிட்டல் திண்ணையில் பதிவு செய்திருந்தோம். தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே பிரதமர் மோடியின் முதலாவது தமிழக தேர்தல் பிரசார கூட்டம் முடிவடைந்துள்ளது அக்கூட்டணியில் தொடரும் சலசலப்பை வெளிப்படுத்தி இருக்கிறது.
மதுராந்தகம் பொதுக்கூட்டம்
