பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக காப்பக நிர்வாகம் இன்று (ஏப்ரல் 4 ) அறிவித்துள்ளது.
யானைகள் பராமரிப்பு பற்றிய ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்‘ என்ற ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இந்தப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கன்சால்வஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோரை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர், தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடுக்கு வருகை தர உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
அப்போது பாகன் தம்பதி பொம்மன், பெள்ளியை சந்திப்பார் எனவும் தெரிவித்தார். பின்னர் கேரளாவில் உள்ள வயநாடு சரணாலயத்துக்கும் மோடி செல்கிறார் என்று கூறினார்.

இதனிடையே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி முதுமலை புலிகள் காப்பகம் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், முதுமலையில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவையும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுவதாக காப்பக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்