பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நடந்த தாக்குதலின் எதிரொலியாக பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணங்களை ஒத்தி வைத்தார். modi took super decision after operation sindoor
சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை இன்று (மே 7) அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஒன்பது இடங்களை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி அழித்தன.

முப்படைக்கு சுதந்திரம்!
இதற்காக கடந்த 15 நாட்களாக தனது அமைச்சரவை மற்றும் முப்படை தளபதிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக பதில் தாக்குதலுக்கான இலக்குகள் மற்றும் நேரத்தைத் தீர்மானிக்க ராணுவத்துக்கு முழுமையான சுதந்திரத்தை பிரதமர் வழங்கி இருந்தார்.
அவரது வழிகாட்டுதலின் படி ஆபரேஷன் சிந்தூரை இன்று அதிகாலை வெற்றிகரமாக நிறைவேற்றியது இந்திய ராணுவம்.

தக்க பதிலடி கொடுப்போம்!
இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அரசு தரப்பில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசுகையில், ”கடந்த 15 வாரங்களாக நாங்கள் இந்தியாவுக்கு விரோதமான எதையும் ஒருபோதும் தொடங்க மாட்டோம் என்று கூறி வருகிறோம். ஆனால் நாங்கள் தாக்கப்பட்டால், அதற்கு தக்க பதிலடி கொடுப்போம். இந்திய அரசு தனது தாக்குதலை நிறுத்தினால், இந்திய எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க பாகிஸ்தான் அரசு தயாராக இருக்கிறது” என்று கூறினார்.
இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பிறகு போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

அமைச்சரவை கூட்டம்!
அதன்படி, ரகசியமாக தீட்டப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது? அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி விளக்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் தனி சந்திப்பை நடத்தினார்.
தொடர்ந்து இந்த மாதத்தில் செல்லவிருந்த நார்வே, குரோஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய தனது வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைப்பதாக பிரதமர் மோடி தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.