ADVERTISEMENT

சென்னையில் இறங்கிய மோடி.. ஆ.ராசா செய்த ‘சம்பவம்’

Published On:

| By Mathi

A Raja DMK

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரசார கூட்டத்துக்காக பிரதமர் மோடி சென்னை வருகை தந்தார். சென்னையில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார் மோடி.

மோடி சென்னை வந்திறங்கிய போது திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில்
ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் 25 துரோகங்கள்!” என பட்டியல் வெளியிட்டார்.

ADVERTISEMENT

ஆ.ராசா, தமது எக்ஸ் பக்கத்தில், “தொகுதி மறுவரையறை செய்து தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்களைக் குறைத்து, தமிழ்நாட்டின் குரலை அடக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார்.

ஆ.ராசா எம்.பி. வெளியிட்ட மத்திய அரசின் 25 துரோகங்கள் பட்டியல்:

ADVERTISEMENT
  1. தொகுதி மறுவரையறை அச்சுறுத்தல்: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்களைக் குறைத்து, தமிழ்நாட்டின் குரலை அடக்க முயற்சித்தல்.
  2. ஆளுநர் தலையீடு: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்டப்பேரவை பணிகளை முடக்கும் வகையில் ஆளுநர் மூலம் நிர்வாகத்தில் முட்டுக்கட்டை போடுதல்.
  3. கோவை மெட்ரோ முடக்கம்: பெரும் தொழில் நகரமான கோவைக்கான மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்தல்.
  4. மதுரை மெட்ரோ புறக்கணிப்பு: தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கான மதுரை மெட்ரோ திட்டத்தைத் தடுத்து நிறுத்துதல்.
  5. சென்னை மெட்ரோ 2-ம் கட்டம்: மற்ற மாநிலங்களுக்கு வழங்குவது போல் நிதி வழங்காமல், 63,000 கோடி ரூபாய் சுமையை தமிழ்நாடு அரசின் மீதே சுமத்துதல்.
  6. ஓசூர் விமான நிலையம் தடுப்பு: பெங்களூருக்குப் போட்டியாக ஓசூர் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காப் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுதல்.
  7. கீழடி அகழாய்வுப் புறக்கணிப்பு: தமிழர்களின் தொன்மையான வரலாற்றைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகளை அங்கீகரிக்க மறுப்பதோடு, அதற்குரிய முக்கியத்துவத்தைத் தராமல் ஓரங்கட்டுதல்.
  8. கல்வி நிதி மிரட்டல் (PM-SHRI): புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே சமக்ர சிக்ஷா (Samagra Shiksha) நிதி விடுவிக்கப்படும் என மிரட்டுதல்.
  9. மாநில சுயாட்சி பாதிப்பு: மாநில அரசோடு கலந்தாலோசிக்காமல் ஒன்றிய அரசின் திட்டங்களை (UDAI, வேளாண் சட்டங்கள் போன்றவை) தன்னிச்சையாகத் திணித்தல்.
  10. கல்வி அதிகாரம் பறிப்பு: மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைச் சிதைக்கும் வகையில் மருத்துவக் கனவை முடக்கும் NEET தேர்வைக் கட்டாயமாக்குதல்.
  11. வரிப் பகிர்வில் அநீதி: தமிழ்நாட்டின் வரிப் பங்களிப்பு அதிகமாக இருந்தும், திரும்பக் கொடுக்கும்போது மிகக்குறைந்த நிதியை மட்டும் ஒதுக்குதல்.
  12. 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்குதல்: மகாத்மா காந்தியின் பெயரில் இருந்த திட்டத்தை மாற்றி, நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பைப் பறித்தல்.
  13. ஜவுளித்துறை புறக்கணிப்பு: ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஜவுளி மண்டலங்களைப் புறக்கணித்து, வட மாநிலங்களுக்குச் சலுகைகளை வாரி வழங்குதல்.
  14. ஜிஎஸ்டி இழப்பீடு தாமதம்: தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைத் தடுத்து நிறுத்தி நிதி நெருக்கடியை உருவாக்குதல்.
  15. 15-வது நிதி ஆணையத்தின் தண்டனை: குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக 15-வது நிதி ஆணையத்தின் மூலம் தமிழ்நாட்டின் நிதிப்பகிர்வைக் குறைத்தது.
  16. மதுரை எய்ம்ஸ் “ஒற்றைச் செங்கல்”: 2015-ல் அறிவிக்கப்பட்டும், இன்றுவரை கட்டுமானப் பணிகளைத் தொடங்காமல் தமிழக மக்களை ஏமாற்றுதல்.
  17. உயர்நீதிமன்றத்தில் தமிழ்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தல்.
  18. சமஸ்கிருதம் vs தமிழ் நிதி: செம்மொழித் தமிழுக்கு மிகக் குறைந்த நிதியும், வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு நூறு மடங்கு அதிக நிதியும் ஒதுக்கிப் பாரபட்சம் காட்டுதல்.
  19. தமிழ்நாட்டின் தொழில் மற்றும் போக்குவரத்து துறையைப் புறக்கணித்தல்: தேசியத் தொழில் வழித்தடத் திட்டங்களில் தமிழ்நாட்டின் முக்கியப் பகுதிகளைப் புறக்கணித்தல்.
  20. ஜல் ஜீவன் திட்டம்: 1.2 கோடி மக்களுக்கான குடிநீர் திட்ட நிதியை (சுமார் ₹ 3,000 கோடி) ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைத்து முடக்குதல்.
  21. ஊதியத் தாமதம்: தமிழ்நாட்டின் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் ஊதியம் வழங்காமல் தவிக்க விடுதல்.
  22. செஸ் (Cess) மற்றும் கூடுதல் கட்டணங்கள்: மாநிலங்களுடன் பகிரத் தேவையில்லாத ‘செஸ்’ வரிகள் மூலம் தமிழ்நாட்டின் வருவாய் உரிமையைப் பறித்தல்.
  23. பேரிடர் நிதி மறுப்பு: மிச்சாங் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்பிற்கு SDRF தவிர கூடுதல் நிவாரண நிதி (NDRF) வழங்க மறுத்துத் துரோகம் இழைத்தல்.
  24. காவிரி நீர் விவகாரம்: காவிரி மேலாண்மை வாரியத்தை முறையாகச் செயல்படுத்த விடாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்தல்.
  25. மீனவர்கள் பாதுகாப்பு: இலங்கை கடற்படையால் தாக்கப்படும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தொடர்ந்து புறக்கணித்தல்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share