ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் உயிருக்கு எமனாக மோடி அரசு மாறியுள்ளது என்று திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நியூ ஜல்பைகுரி சந்திப்பு பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு ஒடிஷாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் ஏறத்தாழ 300 பேர் உயிரிழந்தனர்.
இப்படி ரயில் பயணத்தின் போது விபத்து ஏற்பட்டு பயணிகள் உயிரிழப்பது தொடர்ந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இன்று (ஜூன் 19) திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்தில், “ரயில்வே அமைச்சர் பேசும் போது ரயில்வே துறையை நவீனமயமாக்கிவிட்டோம் என்கிறார். பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்கிறார்.
ஆனால் என் கையில் கிடைத்திருக்கும் ஆவணங்கள் எல்லாம் வைத்து பார்க்கும்போது, லோகோ பைலட்டுகளுக்கு தூக்கம் கூட சரியாக கிடைக்கவில்லையென்று தெரியவருகிறது. ரயில்வே சட்டப்படி இரண்டு இரவுகள் அவர்கள் வேலை செய்தால், ஒரு நாள் விடுப்பு கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களால் சரியாக செயல்பட முடியும்.
ஆனால் 4 இரவுகள் தொடர்ந்து வேலை கொடுக்கிறார்கள் என்பது லோகோ பைலட்டுகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதுகுறித்து பல முறை அவர்கள் எடுத்து சொல்லியும், அதற்கு உரிய பதில் ரயில்வே துறையிடமிருந்து வராததால், ஜூன் மாதத்தில் இருந்து அவர்களே விடுமுறை எடுத்துக்கொள்கிறார்கள்.
10, 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இதுபோன்ற அழுத்தம் எங்களுக்கு இல்லை என்கிறார்கள். ரயிலின் வேகமும் குறைவாகதான் இருந்தது. இன்று 130 கிமீ வேகத்தில் செல்ல சொல்கிறார்கள். அதில் ஒரு கிமீ வேகத்தை குறைத்தால் கூட கேள்வி கேட்கிறார்கள்.
அதேசமயம் அவர்களை தூங்க அனுமதிக்கவில்லை என்கிற போது இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.
வாரத்தில் இரண்டு இரவுகள் கட்டாயம் விடுப்பு கொடுக்க வேண்டும். ஆனால் இதையும் கொடுப்பதில்லை.
ரயில் பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் ரயில் ஓட்டுநர் தூக்கமில்லாமல் ஓட்டுகிறார் என்று தெரிந்தால் நமக்கெல்லாம் எப்படி இருக்கும்.
மத்திய ரயில்வே அமைச்சர் கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார். ஆனால் ரயில் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்துக்கு செவிசாய்க்கவில்லை.
மக்களின் உயிரிழப்புக்கு அவர்களிடமிருந்து ஒரு ரியாக்ஷன் கூட இல்லை. என்னை பொறுத்தவரை ரயில் பயணிகளின் எமனாக இருக்கிறார். இது எனது நேரடி குற்றச்சாட்டு. கோவிட் விஷயத்திலும் மோடி எமனாக இருந்தார்” என கடுமையாக விமர்சித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த பாமக வேட்பாளர்!
பணப்பரிமாற்ற வழக்கு: செந்தில் பாலாஜி புதிய மனு… ED பதிலளிக்க உத்தரவு!