ஜல்லிக்கட்டு தீர்ப்பு – பிரதமர் தான் காரணம் : அண்ணாமலை

Published On:

| By Monisha

no ban on jallikattu

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கு காரணம் பிரதமர் மோடி தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குக் காரணம் பிரதமர் மோடி தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு பாஜக மற்றும் தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ADVERTISEMENT

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. ஜூலை 11, 2011 அன்று, காங்கிரஸ், திமுக கூட்டணி அரசின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

பின்னர் 2014ஆம் ஆண்டு மே மாதம், உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு மீதான தடையை உறுதி செய்தபோது, ஜெய்ராம் ரமேஷ் அந்தத் தீர்ப்பை வரவேற்று, “காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது” என்று கூறினார்.

ADVERTISEMENT

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முன்னாள் பிரதமரும், அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்களைக் கைவிடுவது நன்று என்று மனிதநேய சங்கம் ஒன்றின் கடிதத்திற்குப் பதிலளித்தார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பாரத பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து, அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் மத்திய அரசு உத்தரவுக்குத் தடை விதித்ததும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு அவசர சட்டத்தை இயற்றுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.

2016 ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு முழுவதுமாக தடை செய்யப்படும் என்று கூறியிருந்தது.

தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு இருந்த வெறுப்பு அத்தகையது. ஆனால், காங்கிரஸ் கட்சி இன்று திமுகவுடன் இணைந்து மக்களை மடைமாற்றி வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் அம்சங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தத் தருணத்தில், ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி மனுத் தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சௌமியா ரெட்டியும் ஒருவர் என்பதையும், சௌமியா ரெட்டிக்கு ஆதரவாக, கர்நாடக மாநிலத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்ததையும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
காங்கிரஸ் கட்சியாலும் அதன் கூட்டணிக் கட்சிகளாலும் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.

ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக, தொடக்கம் முதல் இன்று வரை யாரேனும் குரல் கொடுத்திருந்தால் அது பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வெற்றி விழா: முதல்வர் ஸ்டாலின்

திமுக மீது புகார்: ஆளுநரை சந்திக்கும் ஈபிஎஸ்

modi is only reason for no ban on jallikattu
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share