சிவகங்கை அருகே நேற்று (நவம்பர் 30) அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாகி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒன்பது பெண்கள், ஒரு ஓட்டுநர் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் மேலும் சிலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி இந்த விபத்து சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் சிவகங்கையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருப்பவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து : ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
