சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Published On:

| By Balaji

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலை பெற்றிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே துறை நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூரிய மின் சக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ADVERTISEMENT

தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சூரிய மின் சக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணா ட்விட்டரில், “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தங்குமிடங்களில் நிறுவப்பட்ட சூரிய தகடுகள் மூலம் 100 சதவிகித மின் ஆற்றலை தயாரிக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இங்கு தினசரி 6,000 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதில், இந்த ரயில் நிலையத்துக்கு தேவையான 2,000 யூனிட் பயன்படுத்தப்பட்ட பிறகு 4,000 யூனிட் மின்சாரம் உபரியாக இருக்கிறது.

இந்த சாதனையை படைத்த சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் ட்விட்டரில், “சூரிய சக்திக்கான பாதையை சென்ட்ரல் ரயில் நிலையம் வகுத்து தந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அதுபோன்று தாம்பரம், மாம்பலம், கிண்டி, செங்கல்பட்டு புறநகர் நிலையங்கள் என சென்னை கோட்டத்துக்குட்பட்ட 13 ரயில் நிலையங்களில் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share