வைஃபை ஆன் செய்ததும் உதயநிதி சனாதனம் பற்றிய மாநில தேசிய அளவிலான அப்டேட்டுகள் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“சனாதன ஒழிப்பு பற்றி செப்டம்பர் 2 ஆம் தேதி அமைச்சர் உதயநிதி பேசியது செப்டம்பர் 7 ஆம் தேதி வரை எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. செப்டம்பர் 6 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்தோனேசியாவுக்கு ஆசியான் மாநாட்டுக்கு புறப்படுவதற்கு முன்பு பிற்பகல் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அமைச்சரவை அஜெண்டாக்களை நிறைவேற்றிய பிறகு, கடைசி 5 முதல் 8 நிமிடங்கள் சனாதனம் பற்றி திமுக அமைச்சர் உதயநிதி பேசிய விவகாரம் குறித்துக் கொந்தளித்துவிட்டார்.
வழக்கமாக அமைச்சரவை கூட்டங்களில் திட்டமிடப்பட்ட பணிகள் முடிந்ததும், சாதாரணமாக அமைச்சர்களுடன் கலந்துரையாடும்போது தனது வெளிநாட்டுப் பயணம் பற்றிய அனுபவங்கள் போன்ற சிலவற்றை மட்டுமே பகிர்ந்துகொள்வார் மோடி. ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு சனாதன விவகாரத்தில் கோபம் காட்டிக் கொந்தளித்துவிட்டார் மோடி என்று மத்திய அமைச்சர்களை மேற்கோள் காட்டி கூறுகிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.
கேபினட்டிலேயே மோடி சனாதனம் பற்றி பேசிய பிறகு உதயநிதி மீதான சட்ட ரீதியான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்கிறார்கள் பாஜகவில். செப்டம்பர் 7 ஆம் தேதி அஸ்வத்தாமன், கரு. நாகராஜன், பால் கனகராஜ் உள்ளிட்டோர் அடங்கிய தமிழ்நாடு பாஜக குழுவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அண்ணாமலை எழுதிய கடிதத்தை அளித்தனர். உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அது இன்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். ஆனால் முதலமைச்சரோ செந்தில்பாலாஜியை துறை இல்லாத அமைச்சராக அரசாணையே வெளியிட்டார். இதையடுத்து அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை டிஸ்மிஸ் செய்து மீண்டும் கடிதம் எழுதினார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்த கடிதத்தை நிறுத்தி வைப்பதாகவும், சொலிசிட்டர் ஜெனரலிடம் சட்ட ஆலோசனை கேட்க இருப்பதாகவும் கூறினார் ஆளுநர். ஆனால் அதன் பின் செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமைதியாகிவிட்டார்.
செந்தில்பாலாஜியாவது அமலாக்கத்துறையால் அப்போது கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் உதயநிதி மீது இப்போது அவர் சித்தாந்த ரீதியாக பேசியதன் அடிப்படையில்தான் புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கொடுக்கலாமா என்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அதன் பிறகே அனுமதி தருவது என்ற முடிவில் இருக்கிறார் ஆளுநர். சட்ட ஆலோசனைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தில் இருந்தும் ஆளுநருக்கு அறிவுறுத்தல்கள் வந்திருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே நீட் உண்ணாவிரதத்தில் ஆளுநரை மிகக் கடுமையாக விமர்சித்தார் உதயநிதி. அது தொடர்பாக கடுமையான கோபத்தில் இருக்கிறார் ஆளுநர் ரவி. இந்த நிலையில் சட்ட ஆலோசனைகளுக்குப் பின் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் அனுமதி கொடுப்பார் என்கிறார்கள் பாஜகவினர். அப்படி அனுமதி அளித்தால் அதனை எதிர்கொள்ள உதயநிதியும் தயாராகவே இருக்கிறார். வட இந்தியாவில் இதை வைத்து பாஜக அரசியல் செய்யும் நிலையில், தமிழ்நாட்டிலும் திமுகவிலும் உதயநிதியின் செல்வாக்கு இதனால் அதிகரிக்கும் என்கிறார்கள் திமுகவினர். சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அடுத்தடுத்து பரபரப்புகள் காத்திருக்கின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி: தொடரும் சூமோட்டோ!
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம்!
Comments are closed.